தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவாலயமாகும்.
இச்சிவாலயத்தின் மூலவர் வசிஷ்டேஸ்வரர், தாயார் உலகநாயகியம்மை.
தேவாரம் பாடல் பெற்ற தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருத்தென்குடித்திட்டை, திட்டை |
பெயர்: | தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | தென்குடித்திட்டை |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வசிஷ்டேஸ்வரர் |
தாயார்: | உலகநாயகியம்மை |
தல விருட்சம்: | முல்லை, வெண்செண்பகம், செவ்வந்தி |
தீர்த்தம்: | சக்கர தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
இத்தலத்தில் சிவலிங்கத்தினை வசிட்ட மாமுனிவர் வழிபட்ட காரணத்தினால் மூலவர் விசிஷ்டேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு பசுபதிநாதர், பசுபதீஸ்வரர் என்ற வேறுப் பெயர்களும் உள்ளன. தாயார் உலகநாயகி சுகுந்த குந்தளாம்பிகை, மங்களாம்பிகை என்ற பெயர்கலால் அழைக்கப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 15வது சிவத்தலமாகும்.
தஞ்சாவூர் வட்டத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூருக்கு வட மேற்கே 9 கி.மீ. தூரத்தில் திட்டை அல்லது தென்குடித்திட்டை என அழைக்கப்படும் கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.
திட்டை எனும் சொல் மேடு எனவும் பொருள்ப்படும். பிரளய காலத்தில் இவ்வுலகம் நீரால் சூழப்பட்டபோது திட்டை மற்றும் சீர்காழி ஆகிய சிவதலங்கள் பாதிக்கப்படவில்லை. உலகப் பிரளய காலத்தில் இப்பகுதிகள் திட்டாகத் தோன்றியபடியால் சீர்காழியை வட திட்டை எனவும் வசிஷ்டேஸ்வரர் கோயில் பகுதியை தென் திட்டை அல்லது தென்குடித்திட்டை எனவும் அழைக்கலானார்கள். இறைவன் சுயமாக வெளிப்பட்டு அருள் புரிந்தார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவதுவாக சுயம்பு லிங்கமாக காணப்படுகின்றார். முதல் பிரகாரமாக மூலவர் வசிஷ்டேஸ்வரர் கோவில் கிழக்கே நோக்கியபடி அமைந்துள்ளது. இராஜகோபுரம் மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டுள்ளது. இறைவன் வசிஷ்டேஸ்வரர் சிவலிங்க வடிவில் காணப்படுகின்றார். முன்னால் செப்பினாலான நந்தி மற்றும் பலிபீடம் உள்ளது. கொடிமரம் கருங்கல்லால் செதுகபட்டுள்ளது. இறைவி தெற்கு நோக்கி நின்ற வடிவில் காணப்படுகின்றார் கோவிலின் முன்னால் செப்பால் ஆன நந்தி மற்றும் பலிபீடம் உள்ளது. அம்மன் சந்நிதிக்கு முனபாக மேல் கூரையில் 12 ராசிகளுக்கும் ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. குரு பகவானிற்கு தெற்கு நோக்கி தனி கோயில் அமைக்கப்பட்டுள்ளது ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். தீர்த்தம் இக்கோவிலின் முன்புறம் உள்ளது. சனி பகவானுக்கு பரிகாரம் செய்ய உகந்த கோவிலிலாகவும் இது விளங்குகின்றது.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையால் இக்கோயிலின் நிர்வாகம் நடைபெறுகிறது. இக்கோவிலில் தினந்தோறும் காலை 7:00 மணி முதல் பகல் 12:30 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:
திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்
முன்னைநான் மறையவை முறைமுறை குறையொடுந்
தன்னதாள் தொழுதெழ நின்றவன் தன்னிடம்
மன்னுமா காவிரி வந்தடி வருடநற்
செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.
ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றிமால்
கூறினார் அமர்தருங் குமரவேள் தாதையூர்
ஆறினார் பொய்யகத் தையுணர் வெய்திமெய்
தேறினார் வழிபடுந் தென்குடித் திட்டையே..
This article uses material from the Wikipedia தமிழ் article தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.