விசயகாந்து (Vijayakanth, விஜயகாந்த்; இயற்பெயர்: விஜயராஜ், 25 ஆகத்து 1952 – 28 திசம்பர் 2023) ஒரு திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சியின் நிறுவனத் தலைவரும் ஆவார்.
இவர் 2006 முதல் 2016 வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். இவரது நான்கு தசாப்த திரை வாழ்க்கையில் இவர் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். வைதேகி காத்திருந்தாள் (1984), அம்மன் கோவில் கிழக்காலே (1986), பூந்தோட்ட காவல்காரன் (1988), செந்தூரப்பூவே (1988), புலன் விசாரணை (1990), சின்ன கவுண்டர் (1992), ஆனஸ்ட் ராஜ் (1994), தாயகம் (1996) மற்றும் வானத்தைப் போல (2000) ஆகிய திரைப்படங்களில் இவரது நடிப்பிற்காக இவர் அறியப்படுகிறார்.
விஜயகாந்த் | |
---|---|
தமிழகச் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் 13 மே 2011 – 19 மே 2016 | |
முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா ஓ. பன்னீர்செல்வம் |
சபாநாயகர் | து. ஜெயக்குமார் ப. தனபால் |
முன்னையவர் | ஜெ. ஜெயலலிதா |
பின்னவர் | மு. க. ஸ்டாலின் |
தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 13 மே 2011 – 19 மே 2016 | |
முன்னையவர் | எஸ். சிவராஜ் |
பின்னவர் | கே. வசந்தம் கார்த்திகேயன் |
தொகுதி | ரிஷிவந்தியம் |
பதவியில் 8 மே 2006 – 8 மே 2011 | |
முன்னையவர் | ஆர். கோவிந்தசாமி |
பின்னவர் | வி. முத்துக்குமார் |
தொகுதி | விருத்தாச்சலம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | விசயராஜ் அழகர்சாமி 25 ஆகத்து 1952 மதுரை, மதராசு மாநிலம் (தற்போது தமிழ்நாடு), இந்தியா |
இறப்பு | 28 திசம்பர் 2023 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 71)
குடியுரிமை | இந்தியர் |
அரசியல் கட்சி | தேசிய முற்போக்கு திராவிட கழகம் |
துணைவர் | பிரேமலதா விசயகாந்து |
பிள்ளைகள் | விசய பிரபாகரன், சண்முகபாண்டியன் |
வாழிடம்(s) | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
வேலை | |
விருதுகள் |
|
புனைப்பெயர்s |
|
இவர் இரண்டு பிலிம்பேர் விருதுகளையும், மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ் நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான கலைமாமணி விருது இவருக்கு 2001ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. செந்தூரப் பூவே திரைப்படத்தில் இவரது கதாபாத்திரத்திற்காக 1988ஆம் ஆண்டில் இவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருதை வென்றுள்ளார். தாயகம் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரத்திற்காக 1996ஆம் ஆண்டில் தமிழக அரசின் திரைப்பட விருதுகள்-சிறப்புப் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இவர் மேலும் இரு சினிமா எக்சுபிரசு மற்றும் ஒரு தென்னிந்திய பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார். தன் திரை வாழ்க்கை முழுவதும் தமிழ் திரைப்படங்களில் மட்டுமே நடித்த மிகச் சில தமிழ் திரைத் துறை கதாநாயகர்களில் விசயகாந்தும் ஒருவர் ஆவார். இவரது திரைப்படங்கள் தெலுங்கு மற்றும் இந்திக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இவர் தன் திரை வாழ்க்கை முழுவதும் இரசிகர்கள் மற்றும் சக திரைத் துறையினரிடமிருந்து பல பட்டப் பெயர்களைப் பெற்றுள்ளார். இவரது 100வது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் (1991) மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் (2000–2006) மாற்றத்தை ஏற்படுத்திய இவரது தலைமைத்துவத்திற்காக இவர் "கேப்டன்" என்ற பட்டப் பெயரைப் பெற்றார். இவரது தலைமைத்துவத்தின் கீழ் நடிகர் சங்கமானது கடன்களிலிருந்து மீண்டது. குறைந்த ஊதியம் பெற்ற உறுப்பினர்களுக்கு இவர் ஓய்வூதியத்தைக் கொண்டு வந்தார். புரட்சிகரமான கதாபாத்திரங்களில் நடித்ததால் இவர் "புரட்சிக் கலைஞர்" என்ற பட்டத்தை எஸ். தாணுவிடமிருந்து பெற்றார். ஏழைக் குடும்பங்களுக்கான உதவி மற்றும் தமிழ் திரைத் துறையின் நலிவுற்ற நடிகர்களுக்கான உதவிகள் ஆகிய மனிதாபிமான உதவிகளை வழங்கியதன் காரணமாக இவர் "கருப்பு எம். ஜி. ஆர்." என்ற பட்டப் பெயரைப் பெற்றார். இவர் படப்பிடிப்புத் தளங்களில் அனைவருக்கும் சம தரத்திலான உணவு வழங்கப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டிற்காக அறியப்படுகிறார். குறைந்த ஊதியம் பெறும் நடிகர்களுக்கும், படக்குழு உறுப்பினர்களுக்கும் தனக்கு வழங்கப்படும் அதே தரத்திலான உணவே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். அவ்வாறு வழங்கப்படுவதை உறுதியும் செய்தார். தயாரிப்பாளர்களுக்கு உதவுவதற்காக சில படங்களுக்கு தன் சம்பளத்தில் ஒரு பங்கையும் விட்டுக் கொடுத்தார்.
இவர் இவரது அரசியல் வாழ்க்கையின் போது தனது "வெளிப்படையான மற்றும் துணிவான நிலைப்பாட்டிற்காக" அறியப்படுகிறார். தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தை 2005இல் நிறுவியதற்குப் பிறகு, 2006 முதல் 2016 வரை விருத்தாச்சலம் மற்றும் இரிஷிவந்தியம் ஆகிய தொகுதிகளை தலா ஒரு முறை பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் இரு முறை இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தே. மு. தி. க. இரண்டாவது அதிக தொகுதிகளைப் பெற்றது. இவர் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரானார். 2016ஆம் ஆண்டு வரை அப்பதவியில் தொடர்ந்தார். இவர் உடல் நலம் குன்றி வந்த காலத்தில் தே. மு. தி. க. தலைவராக தான் 2023இல் இறக்கும் வரையில் தொடர்ந்தார்.
விசயகாந்து என்னும் விசயராஜ், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள இராமானுசபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். இவரது தந்தை பெயர் அழகர்சாமி, தாயார் பெயர் ஆண்டாள் ஆகும். இவருக்கு 1 வயதான போதே இவரது தாயார் இறந்து விட்டார். சிறு வயதிலேயே இவரது குடும்பம் மதுரைக்கு இடம் பெயர்ந்தது. இதனால், விசயகாந்து மதுரையில் மேல மாசி வீதியில் வசித்து வந்தார்.
இவர் தன் தொடக்க கால பள்ளிப் படிப்பை தேவகோட்டையிலுள்ள தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியிலும், மதுரையிலுள்ள நாடார் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியிலுள்ள புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கியிருந்து 1966ஆம் ஆண்டு முதல் 1968ஆம் ஆண்டு வரை 9, 10 வகுப்புகளில் கல்வி கற்றார்.
சிறு வயதிலேயே சினிமா மீது கொண்ட ஆர்வத்தால், படிப்பில் இவர் ஆர்வம் காட்டவில்லை. பத்தாம் வகுப்பு வரை இவர் படித்தார். பிறகு தன் தந்தையின் மேற்பார்வையில் கீரைத்துறை மாகாளிப்பட்டியில் இயங்கிய அரிசி ஆலையில் தனது பதின்ம வயதில் சிறு சிறு பணிகளைச் செய்து வந்தார்.
விசயகாந்து, 1990 ஆம் ஆண்டில் பிரேமலதா என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர்.
1993 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவரது ரசிகர் மன்றத்தினர் சுயேச்சையாகப் போட்டியிட்டனர். அவர்களில் பலர் வெற்றிபெற்றனர். இப்பின்புலத்தில் விஜயகாந்த் தானும் அரசியலில் ஈடுபடும் எண்ணங்கொண்டார். அதனை அவ்வப்பொழுது வெளியிட்டும் வந்தார்.[சான்று தேவை]
2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார். இவர் கட்சியின் நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்றார். இரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவராக இருந்த ராமு வசந்தன், கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.
2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழகச் சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார். இத்தேர்தலில் மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சியைச் சேர்ந்த மற்ற வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.
பின்னர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவரது கட்சிக்கு எதிர்க்கட்சித் தகுதி கிடைத்தது. 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
பின்னர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தார். இவர் அணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அத்தேர்தலில் இவர் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் இவரும், இவருடைய கூட்டணிக் கட்சிகள் அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வியைச் சந்தித்தனர். இவர் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டை தொகுதியில், 34,447 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்
எந்தவொரு திரைத் துறைப் பின்புலமும் இல்லாத போதும் நடிகராகுவதற்காக இவர் மதுரையை விட்டுப் புறப்பட்டார். 1976-1977இல் மதுரையின் இராசி புகைப்படக் கடையில் ஆசைத் தம்பி என்பவரிடம் இவர் திரைத் துறையில் வாய்ப்புத் தேடுவதற்காக புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். பகலில் அரிசி ஆலையில் பணி புரிந்து விட்டு இரவில் புகைப்படங்கள் எடுத்தார். 41 நாட்களில் 32 புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இதற்குக் காரணம் ஒரு புகைப்படம் எடுக்க இரண்டு மணி நேரம் ஆகும் என்பதாகும். இரண்டு மணி நேரம் மட்டும் தூங்கி விட்டு இரவு முதல் அதி காலை வரை புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. 8,000 வார்ட்ஸ் சக்தியுள்ள விளக்குகளின் வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு புகைப்படம் எடுக்க வேண்டியிருந்தது. இப்புகைப்படங்கள் திரைத் துறையில் இவர் பக்கம் கவனத்தை ஈர்க்க உதவின.
இயக்குனர் பி. மாதவன் என் கேள்விக்கு என்ன பதில் (1978) திரைப்படத்தில் இவரை இரஜினிகாந்தின் தம்பியாக ஒரு துணைக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்த செய்தார். இவருக்கு 101 ரூபாய் முன் பணமாகக் கொடுக்கப்பட்டது. எனினும், மூன்று நாள் மட்டுமே நடித்ததற்குப் பிறகு இவர் நீக்கப்பட்டு இவரது கதாபாத்திரத்தில் ஏ. ஈ. மனோகரன் நடிக்க வைக்கப்பட்டார்.
இவரது தொடக்க கால திரை வாழ்க்கையின் போது பல பிற திரைப்படத் தயாரிப்பாளர்களால் இவர் பல பட வாய்ப்புகளை இழந்தார். இதற்கு பெரும்பாலான காரணமாக இவர் கருப்பான தோல் நிறத்தைக் கொண்டிருந்தது கூறப்பட்டது. பல முன்னணி நடிகைகள் இவர் கருப்பான தோல் நிறத்தைக் கொண்டிருந்ததால் இவரது தொடக்க கால திரை வாழ்க்கையின் போது இவருடன் நடிக்க மறுப்புத் தெரிவித்தனர். சட்டம் ஒரு இருட்டறை (1981), வைதேகி காத்திருந்தால் (1984) மற்றும் ஊமை விழிகள் (1986) ஆகிய திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு அனைத்து முன்னணி நடிகைகளும் இவருடன் நடிக்க ஆரம்பித்தனர்.
எம். ஏ. காஜாவின் இனிக்கும் இளமை (1979) திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்புத் தந்தால் மதுரை ஏரியாவை வாங்கிக் கொள்வதாகக் கூறி மதுரை சேனாசு பிலிம்சின் முகம்மது மசூர் அந்தப் படத்தில் வில்லன் வேடத்தை இவருக்குப் பெற்றுத் தந்தார். இத்திரைப்படத்தில் இவரது பெயரை விஜயராஜ் என்பதிலிருந்து விஜயகாந்த் என எம். ஏ. காஜா மாற்றினார். திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றிய தன் நண்பர்கள் கொடுத்த ஆடைகளை அணிந்து இத்திரைப்படத்தில் இவர் நடித்தார். எனினும், இத்திரைப்படம் விமர்சன மற்றும் வணிக ரீதியில் தோல்வியடைந்தது.
இதைத் தொடர்ந்து இவர் கதாநாயகனாக அகல் விளக்கு (1979) திரைப்படத்தில் நடித்தார். அத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் அதிகாலையிலேயே அழைத்துச் சென்று, கதாநாயகி வரப்போவதைக் காரணம் கட்டி பிற்பகல் மூன்று மணி வரை இவரை உணவு உண்ண அனுமதிக்கவில்லை. பசியை மறைத்துக்கொண்டு நடித்தார். அதற்குப் பின்னரே உணவு உண்ண அனுமதிக்கப்பட்டார். தன் பட நிறுவனத்திற்கு வரும் அனைவருக்கும் உணவளிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்நிகழ்வுக்குப் பிறகு தான் இவருக்கு உருவானது.
இவரது 1980ஆம் ஆண்டு திரைப்படமான தூரத்து இடிமுழக்கம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பாராட்டப்பட்டது. இவருக்கு ஓர் அங்கீகாரத்தைக் கொடுத்தது. தான் வளர்ந்து வந்த ஆண்டுகளில் சிவப்பு மல்லி (1981) மற்றும் சாதிக்கொரு நீதி (1981) போன்ற புரட்சிகர சிந்தனைகளைக் (பொதுவுடைமைவாதம் மற்றும் மார்க்சியம்) கொண்ட திரைப்படங்களில் இவர் நடித்தார். இத்திரைப்படங்களில் இவர் புரட்சி செய்யும் கோபக்கார இளைஞனாக நடித்தார்.
எனினும், வணிக ரீதியாக ஒரு கதாநாயகனாக இவரை முன்னிறுத்திய திரைப்படம் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை (1981) திரைப்படம் ஆகும். இதற்குப் பிறகு இருவரும் பல திரைப்படங்களில் இணைந்து பணிபுரிந்தனர். இத்திரைப்படம் இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
பிறகு இவர் ஓம் சக்தி (1982) என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். இதற்குப் பிறகு இவர் எந்த ஒரு திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. இவரது பெரும்பாலான திரைப்படங்கள் ஊழல், நேர்மை மற்றும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுதல் ஆகியவற்றைச் சுற்றி கதை அமைக்கப்பட்டிருந்தன. இவர் ஒரு காவல்துறை அதிகாரியாக 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தேசப்பற்று மிக்கவர், கிராமத்தில் நல்லது செய்பவர் மற்றும் இரட்டை வேடங்கள் ஆகிய கதாபாத்திரங்களுக்காக இவர் அறியப்படுகிறார்.
டௌரி கல்யாணம் (1983), நூறாவது நாள் (1984) மற்றும் வைதேகி காத்திருந்தாள் (1984) உள்ளிட்ட அதிரடி, நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான கருப்பொருள்களைக் கொண்ட வணிகத் திரைப்படங்கள் மூலம் மெதுவாக இவர் வளர்ந்து வந்தார். இதில் வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன. இத்திரைப்படம் இவரது திரை வாழ்வில் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. தமிழ் திரைத் துறையில் ஒரே ஆண்டில் அதிக திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவராக இவர் 1984ஆம் ஆண்டு உருவானார். அந்த ஆண்டு 18 திரைப்படங்களில் நடித்தார். இதே போல் 1985ஆம் ஆண்டு 17 திரைப்படங்களில் நடித்தார். தமிழ் திரைத்துறையின் முதல் முப்பரிமாண திரைப்படமான அன்னை பூமியில் (1985) இவர் இராதாரவி மற்றும் கன்னட நடிகர் டைகர் பிரபாகருடன் நடித்துள்ளார். கன்னட நடிகர் விஷ்ணுவர்தனுடன் ஈட்டி (1985) திரைப்படத்தில் இவர் இணைந்து நடித்தார். இவரது நகைச்சுவைத் திரைப்படமான நானே ராஜா நானே மந்திரி (1985) வணிக ரீதியிலான வெற்றிப் படமாகும்.
பிறகு இவர் அம்மன் கோவில் கிழக்காலே (1986) திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் இவருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது. இத்திரைப்படம் திரையரங்குகளில் 150 நாட்களுக்கு ஓடியது. இவர் மனக்கணக்கு (1986) திரைப்படத்திலும் நடித்துள்ளார். கமல்ஹாசனுடன் இவர் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் இதுவாகும். இவ்வெற்றிகளுக்குப் பிறகு ஊமை விழிகள்(1986) திரைப்படம் வெற்றியடைந்தது. இது ஒரு செந்தரமான படமாகவும், அதன் காலத்தைத் தாண்டிய திரைப்படமாகவும் பாராட்டப்பட்டது. வழக்கத்திற்கு மாறாக இத்திரைப்படத்தில் இவர் ஒரு வயதான காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார். இரசினிகாந்து மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்குப் போட்டியளராக இத்திரைப்படம் இவரை உயர்த்தியது.
2023 திசம்பர் 28 அன்று காலை விசயகாந்து உடல்நலக்குறைவால் தனது 71 வயதில் மருத்துவமனையில் காலமானார். முன்னதாக இவருக்கு செயற்கை சுவாசக் கருவியின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இவரது மறைவிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித் சா, ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல், அனுராக் தாக்கூர், லோ. முருகன், பாஜக தேசியத் தலைவர் நட்டா, காங்கிரசு தலைவர்கள் இராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ச்சுன் கார்கே, தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினறாயி விஜயன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கர்நாடகத் துணை முதல்வர் டி. கே. சிவகுமார், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அவரது உடல் அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் தேமுதிக கட்சித் தலைமை அலுவலகத்தில் முதல் நாள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 2023 திசம்பர் 29 அன்று அதிகாலை பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடல் மைதானத்தில் வைக்கப்பட்டது. பிரம்மாண்ட இறுதி ஊர்வலத்திற்குப் பின், மாலையில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சித் தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதை உடன் "புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்" என பொறிக்கப்பட்டிருந்த சந்தனப்பேழையில் வைக்கப்பட்டு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
2024 சனவரி 3அன்று, பிரதமர் மோதி மறைந்த விசயகாந்திற்கு தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் புகழுரை எழுதினார்.
This article uses material from the Wikipedia தமிழ் article விசயகாந்து, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.