தபுந்தா ஹயாங் ஸ்ரீ ஜயனாசா (Dapunta Hyang Sri Jayanasa) ஸ்ரீ விஜயப் பேரரசின் முதலாவது மன்னராவார்.
இவரே ஸ்ரீ விஜய அரச பரம்பரையைத் தோற்றுவித்தவரெனக் கருதப்படுகிறது. நற்பேற்றைப் பெறவும் தம்மை அண்டிய பகுதிகளை வெற்றி கொள்ளவும் புனிதப் பயணம் செய்தவராகிய இவரது பெயர் ஸ்ரீ விஜயத்தில் பொ.கா. 7 ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட தொடர் கல்வெட்டுக்களான "சித்த யாத்திரைக் கல்வெட்டுக்களில்" குறிப்பிடப்பட்டுள்ளது. சித்த யாத்திரை (siddha yatra) என்றால் புனிதப் பயணம் என்று பொருள். இவரது ஆட்சி பொ.கா. 671 இற்கும் 702 இற்குமிடையில் நிலவியது.
|
பொ.கா. 671 ஆம் ஆண்டு ஸ்ரீ விஜயத்துக்குப் பயணம் செய்து, அங்கேயே ஆறு மாத காலம் தங்கியிருந்த சீன பௌத்தத் துறவியாகிய இ சிங் ஸ்ரீ விஜயத்தின் மன்னர் காட்டிய பெருந்தன்மையாலும், அன்பினாலும், விருந்தோம்பலினாலும் தான் பெரிதும் கவரப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். இ சிங் துறவியின் அறிக்கையிற் குறிப்பிடப்படும் அரசர் பலெம்பாங் நகரில் கண்டெடுக்கப்பட்டதான 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, குறிப்பாக பொ.கா. 682 ஐச் சேர்ந்த கெடுக்கான் புக்கித் கல்வெட்டு குறிப்பிடும் மன்னரே என்றும் இரண்டு குறிப்புக்களும் ஒருவரையே குறிப்பிடுகின்றன என்றும் பிற்காலத்தில் கருதப்பட்டது. எனினும் பின்னர் இக்கல்வெட்டுக்களின் பொருள் கூறுவதில் வரலாற்றாசிரியர்களிடம் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.
தபுந்தா ஹயாங் என்ற பட்டங் கொண்ட மன்னர் படகுகளின் மூலம் சித்த யாத்திரை எனப்படும் புனிதப் பயணம் மேற்கொண்டதாக சக ஆண்டு 605 இல், அஃதாவது பொ.கா. 683 இல் எழுப்பப்பட்ட கெடுக்கான் புக்கித் கல்வெட்ட் குறிப்பிடுகிறது. இவர் மினங்கா தம்வான் எனுமிடத்திலிருந்து இருபதாயிரம் படை வீரர்களுடன் புறப்பட்டு மத்தாஜாப் எனுமிடத்தை நோக்கிச் செல்கையில் பல்வேறு பகுதிகளையும் வெற்றி கொண்டார். பங்கா தீவில் கண்டு பிடிக்கப்பட்ட பொ.கா. 686 இன் கொத்தா காப்பூர் கல்வெட்டு, ஜம்பி ஹுலுவில் கண்டுபிடிக்கப்பட்ட பொ.கா. 686 ஐச் சேர்ந்த கராங் பிராஹி கல்வெட்டு, லம்புங்ஙின் தென் பகுதியிற் கண்டு பிடிக்கப்பட்ட பலாஸ் பஸெமாஹ் கல்வெட்டு ஆகிய ஏனைய கல்வெட்டுக்கள் அனைத்துமே சித்த யாத்திரையையும் ஸ்ரீ விஜயப் பேரரசின் வெற்றிகளையும், அஃதாவது ஒரே நிகழ்வையே குறிப்பிடுகின்றன. தபுந்தா ஹயாங் ஜம்பி, பலெம்பாங், தென் லம்புங், பங்கா தீவு என்பவற்றை வெற்றி கொண்டு ஸ்ரீ விஜயப் பேரரசை நிறுவியதாக இக்கல்வெட்டுக்களனைத்திலிருந்தும் அறியப்படுகிறது. அத்துடன் இவர் சாவகத் தீவை நோக்கிப் படையெடுத்துச் சென்றமை மேற்குச் சாவகத்திலிருந்த தருமனகாரா அரசின் வீழ்ச்சிக்குப் பங்களித்தது.
This article uses material from the Wikipedia தமிழ் article தபுந்தா ஹயாங் ஸ்ரீ ஜயனாசா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.