குரு-சிஷ்யப் பாரம்பரியம், அல்லது குரு-சிஷ்யப் பரம்பரை இந்து சமயம், சமணம், பௌத்தம் மற்றும் சீக்கியம் மற்றும் திபெத்திய பௌத்தம் போன்ற இந்திய மெய்யியல் சமயங்களில் ஆசிரியர்கள் மற்றும் அவர்தம் சீடர்களின் வரிசையை குறிக்கிறது.
ஒவ்வொரு குரு-சீடப்பரம்பரையும் ஒரு குறிப்பிட்ட சம்பிரதாயத்திற்கு சொந்தமானது. மேலும் அவர்தம் மெய்யியலை கற்பிப்பதற்கான அதன் சொந்த குருகுலங்கள் கொண்டிருக்கும். அவைகளை ஆசிரமம், ஆகாரா, கோம்பா, மடம் அல்லது விகாரைகளாக இருக்கலாம். ஒரு குரு அல்லது லாமாவை பின்தொடரும் சீடர் அல்லது சேலா (பின்தொடர்பவர்) அல்லது சிரமணர் (ஞானத்தை தேடுபவர்) மூலம் ஆன்மீக போதனைகள் கடத்தப்படும். சீடனுக்கு முறையான குருகுலங்களில் குருவால் சீடனுக்கு முறையான தீட்சை வழங்கப்பட்டப் பின்னர் போதனைகள் ஆகமம், ஆன்மீகம், வேதம் மற்றும் கலைகள் எதுவாக இருந்தாலும், குருவிற்கும் சீடருக்கும் இடையே வளரும் உறவின் மூலம் வழங்கப்படுகிறது.
குருவின் உண்மையான தன்மை மற்றும் குருவிடம் சீடனின் மரியாதை, அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் கீழ்ப்படிதல் ஆகியவற்றின் அடிப்படையிலான இந்த உறவு நுட்பமான அல்லது மேம்பட்ட அறிவை வெளிப்படுத்த சிறந்த வழியாகும் என்று கருதப்படுகிறது. சீடன் இறுதியில் குருவை உள்ளடக்கிய அறிவில் தேர்ச்சி பெறுகிறார்.
குரு-சிஷ்யப் பரம்பரை எனில் என்றால் "குருவிலிருந்து சீடனாக மாறுதல்". பரம்பரை என்பது ஒரு தடையற்ற வரிசை அல்லது தொடர், ஒழுங்கு, வாரிசு, தொடர்ச்சி, பாரம்பரியம் என்று பொருள்படும். பாரம்பரிய குடியுரிமைக் கல்வியில், சீடன் தனது குருவிடம் குடும்ப உறுப்பினராக இருந்து கல்வியைப் பெறுகிறார்.
உபநிடதங்களின் ஆரம்பகால வாய்வழி கல்வி மரபுகளில், குரு-சிஷ்ய உறவு இந்து சமயத்தின் அடிப்படை அங்கமாக பரிணமித்தது. சமசுகிருத சொல்லான உபநிஷத் என்ற சொல்லை உப-நி-ஷத் என்று பிரிக்கலாம். "உப" (அருகில்), "நி" (கீழே) மற்றும் "ஷத்" (அமர்தல்) என்று பொருள். அதாவது குருவிற்கு கீழே அமர்ந்து கல்வி பெறுதல் என்ற ஒரு பொருள் உள்ளது. மகாபாரதத்தில் கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும், இராமாயணத்தில் இராமனுக்கும் அனுமனுக்கும் இடையிலான உறவுகள் குரு-சீடனுக்கு எடுத்துக்காட்டாகும். உபநிடதங்களில் குருமார்கள் மற்றும் சீடர்கள் குறித்த குறிப்புகள் பல இடங்களில் சுட்டுக்காட்டப்படுகிறது. கடோபநிடதத்தில் நசிகேதன் என்ற சீடனுக்கு எமதர்மராசன் குருவாக பிரம்ம வித்தையை கற்றுக்கொடுத்த குறிப்புகள் உள்ளது.
பாரம்பரியமாக பண்டைய இந்தியக் குருகுலங்களில், குருமார்கள் மற்றும் சீடர்களின் வரிசைக்கு பயன்படுத்தப்படும் சொல் குரு-சீடப் பரம்பரை என்பதாகும். குரு-சீடப்பரம்பரை அமைப்பில், அறிவு (எந்தத் துறையிலும்) அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படுவதாக நம்பப்படுகிறது. குரு-சீட பரம்பரைக்கு சமஸ்கிருத மொழியில் "ஒரு தடையற்ற தொடர் அல்லது வரிசை" என்று பொருள். சில சமயங்களில் "வேத அறிவைக் கடத்துவது" என வரையறுக்கப்படுகிறது. வேதக் கல்வி எப்போதும் ஆசார்யர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. குரு-சீடப் பரம்பரை பெரும்பாலும் சம்பிரதாயம் அல்லது தத்துவப் பள்ளி என்று அழைக்கப்படுகிறது. பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கம் அளித்த ஆதி சங்கரர், இராமானுஜர் மற்றும் மத்வரைப் பின்பற்றி அத்வைதம், விசிட்டாத்துவைதம் மற்றும் துவைதம் போன்ற தத்துவப் பள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு குரு-சீடப் பரம்பரை தோன்றியது. மேலும் வைணவத்தில் குருவைப் பின்பற்றி பல சம்பிரதாயங்கள் தோன்றியது. சில குருமார்கள் தங்களின் தத்துவத்தை நிலை நிறுத்த, பரப்ப சீடர் பரம்பரையை உருவாக்கினர்.
ஆகாரா என்பது துறவிகள் தங்கும் மடாலயம் மற்றும் தற்காப்பு கலை பயிற்சி மேற்கொள்ளப்படும் இடமாகும். எடுத்துக்காட்டாக தசனாமி சம்பிரதாயத்தில், துறவிகள் திரிசூலத்தை தற்காப்பு ஆயுதமாக கொண்டுள்ளனர்.
இந்திய சமயங்களில் பரந்த அளவிலான, குரு-சீடன் உறவை பல மாறுபட்ட வடிவங்களில் காணலாம். இந்த உறவில் சில பொதுவான கூறுகள் அடங்கும்:
சுவாமி தயானந்த சரசுவதியின் சீடப்பரம்பரையில் வந்த சுவாமி பரமார்த்தனந்தர், சுவாமி குருபரானந்தர், சுவாமி ஓம்காரநந்தர் ஆகியவர்களை ஒரு குரு-சீடப்பரம்பரையினர் என்பர்.
This article uses material from the Wikipedia தமிழ் article குரு-சிஷ்யப் பாரம்பரியம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.