சத்யம் முறைகேடு வழக்கு (Satyam scandal) என்பது சத்யம் கணினி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்கராஜூ தனது நிறுவனத்தின் வருவாய் அதிக அளவில் உள்ளதாக பல ஆண்டுகளாக மிகைப்படுத்தி கணக்கு காட்டிய வகையில் ரூபாய் 14,000 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, 7 சனவரி 2009இல் பொருளாதார குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்...
தற்போது இந்நிறுவனம் மகேந்திரா குழுமத்துடன் இணைக்கப்பட்டு டெக் மகேந்திரா எனும் பெயரில் இயங்கி வருகிறது....
இந்நிறுவனத்தின் தணிக்கை நிறுவனமான பிரைசுவாட்டர்ஹவுசுகூப்பர்சு (PricewaterhouseCoopers) இதுபோன்ற முறைகேடுகளில் ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டவர்களாக இருந்தனர். இதன் இரு தணிக்கையாளர்களும் இந்திய சி.பி.ஐ ஆல் குற்றம் சாட்டப்பட்டனர்.
தணிக்கையாளர்கள் நிறுவனத்தின் உயர்மட்ட நபர்கள் தரும் தரவுகளை அப்படியே நம்புதல் என்பதை இவ்வழக்கு கேள்விக்குள்ளாக்கியது. மேலும் தணிக்கை முறையில் சுழற்சி போன்ற பல தணிக்கை குறித்த மாற்றங்களுக்கான தேவைகளைக் குறித்த கேள்விகளையும் எழுப்பியது.
பின்விளைவுகள்
உடனடியாக சத்யம் நிறுவனத்தின் பங்குகள் 80% கீழ் இறங்கியது.
இந்திய தகவல் தொழில் நுட்பத் துறை நிறுவனங்களின் நம்பகத்தன்மையை உலக அரங்கில் கேள்விக்குள்ளாக்கியது.
ராமலிங்கராஜூவின் கணக்கு முறைகேட்டை அடுத்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் தனது வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தவும் இயலாமல் திணறும் சூழ்நிலையில் சத்யம் நிறுவனம் இருந்தது.
"ராமலிங்கராஜூவின் முறைகேடு" என்பது "சத்யம் முறைகேடு" என்று பெயர் வழங்கப்பட்டு அந்நிறுவனத்தின் பெயரைக்கெடுத்த போதும் அதன் ஊழியர்கள் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உழைத்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உரிய சமயத்தில் வேலைகளை முடித்துக் கொடுத்தமை பாராட்டப்பட்டது.
இவ்வழக்கு கடினமான எதிர்பாராத சூழ்நிலைகளைச் சமாளிப்பதில் இந்திய அரசுத் துறைப் பணியாளர்களின் உயர்திறமைக்குச் சான்றாக அமைந்தது. இதேபோன்று தணிக்கைத் துறையில் பிற நாடுகளில் சாமர்த்தியமாக ஏமாற்றி அதன் பின்னர் பின்விளைவுகளைச் சமாளிக்க இயலாமல் காணாமல் போன என்ரான் (Enron) போன்ற நிறுவனங்களுக்கிடையே, அரசுக் குழு திறமையாகச் செயல்பட்டு 100 நாட்களில் சத்யத்தை விற்கும் முயற்சியில் வெற்றியும் பெற்று இந்தியாவின் நிலைத்தன்மையைச் சமாளித்தது.
ஏலத்தில் கலந்து கொள்வதற்காக ஆர்வம் காட்டி, எதிர்பார்ப்பை ஏற்படுத்திய காக்னிசன்ட் நிறுவனம் கடைசி கட்டத்தில் ஏலத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று கூறி சூழ்நிலையில் திணறலையும் எதிர்பாராத்தன்மையையும் ஏற்படுத்தியது.
2010 ஏப்ரலில் பொது ஏலத்தில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டெக் மகிந்த்ராவிற்கு சத்யம் கம்ப்யூட்டர்ஸ் விற்கப்பட்டது.
தீர்ப்பு
கடுங் குற்றச்செயற்பாடு முறைகேடு புலனாய்வு அலுவலகம் (Serious Fraud Investigation Office) தொடர்ந்த முதல் வழக்கில், 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், பொருளாதார அமலாக்கப் பிரிவு நீதிமன்றம் ராமலிங்க ராஜு, ராம ராஜு மற்றும் பலருக்கு ஆறுமாத 6 மாத சிறைத் தண்டனையும் அபராதமாக வெவ்வேறு தொகையும் விதித்து தீர்ப்பளித்தது.
நடுவண் புலனாய்வுச் செயலகம் தொடர்ந்த இரண்டாவது வழக்கில், சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் வரவு-செலவு கணக்கில் மோசடி செய்த காரணத்தால், அந்நிறுவனத்தின் நிறுவனரான ராமலிங்க ராஜு உள்பட 10 பேருக்கும், 9 ஏப்ரல் 2015 அன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
This article uses material from the Wikipedia தமிழ் article சத்யம் முறைகேடு வழக்கு, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses. ®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.