கம்போடியாவின் வரலாறு (ஆங்கிலம்: History of Cambodia) என்பது தென்கிழக்காசியாயத் தலைநிலத்தில் அமைந்துள்ள நாடான கம்போடியாவின், கி.மு.
ஐந்தாவது ஆயிரவாண்டுக் காலப்பகுதியில் இருந்து தொடங்கும் வரலாற்றைக் குறிப்பிடுவது ஆகும்.
இன்று கம்போடியா என அழைக்கப்படும் பகுதியின் அரசியல் கட்டமைப்புக் குறித்த விபரமான பதிவுகள் முதன் முதலாகச் சீன மூலங்களில் காணப்படுகின்றன. இப்பதிவுகள், 1-ஆம் நூற்றாண்டு தொடங்கி 6-ஆம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதியில், இந்தோசீனாவின் தெற்குப் பகுதியை உள்ளடக்கியிருந்த பூனான் என்னும் பகுதி தொடர்பானவை.
கீழ் மேக்கொங் என்னும் இடத்தை மையமாகக் கொண்ட பூனான், மிகப் பழைய பிரதேச இந்துப் பண்பாட்டைக் கொண்டதாக இருந்துள்ளது. இது மேற்கில் இருந்த வணிகப் பங்காளிகளுடனான நீண்டகாலச் சமூக-பொருளாதாரத் தொடர்புகளை எடுத்துக்காட்டுகின்றது.
6-ஆம் நூற்றாண்டு அளவில், சீன மூலங்களில் சென்லா என அழைக்கப்படும் ஒரு நாகரிகம், பூனானுக்குப் பதிலீடாக உருவானது. இது முன்னரிலும் பெரியதும் இந்தோசீனத்தின் ஏற்றத் தாழ்வான அமைப்புக கொண்ட கூடுதலான நிலப் பகுதிகளை உள்ளடக்கியதாகவும் இருந்தது. அத்துடன், ஒன்றுக்கு மேற்பட்ட அதிகார மையங்களைக் கொண்டதாகவும் காணப்பட்டது.
கெமர் பேரரசு 9-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறுவப்பட்டது. இரண்டாம் செயவர்மன் இதை நிறுவினார். கெமர் பேரரசின் பலம் வாய்ந்த அரசர்கள் இந்து தேவராச மரபைப் பின்பற்றினர்; செந்நெறிக் காலக் கெமர் நாகரிகத்தின் மீது 11-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செலுத்தினர். மாகாண மூலத்தைக் கொண்ட ஒரு புதிய வம்சம், புத்த மதத்தை அறிமுகப்படுத்தியது. இது அரச மதம் சார்ந்த தொடர்ச்சி இன்மையையும், பொதுவான வீழ்ச்சியையும் ஏற்படுத்தியதாகச் சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
கம்போடிய அரசர்களின் காலவரிசை 14-ஆம் நூற்றாண்டில் முற்றுப் பெறுகின்றது. நிர்வாகம், வேளாண்மை, கட்டிடக்கலை, நீரியல், நகரத் திட்டமிடல், கலைகள் போன்ற துறைகளில் ஏற்பட்ட சாதனைகள், இந்த நாகரிகத்தின் ஆக்கத்திறன், முன்னேற்றம் ஆகியவற்றுக்குச் சான்றாக உள்ளன. தென்கிழக்காசியப் பண்பாட்டு மரபில் இது ஒரு அடிப்படை ஆகும்.
மேற்படி வீழ்ச்சியுடன் கூடிய மாறுநிலைக் காலம் ஏறத்தாழ 100 ஆண்டுகள் நீடித்தது. இதன் பின்னர் கம்போடிய வரலாற்றின் நடுக்காலம் அல்லது கம்போடியாவின் இருண்ட காலம் என அழைக்கப்படும் காலம் 15 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொடங்கியது. இந்து மதம் சார்ந்த நம்பிக்கைகள் கைவிடப்பட்டு விட்டாலும், பழைய தலைநகரில் இருந்த இந்துமதக் கட்டிட அமைப்புக்கள் தொடர்ந்தும் முக்கிய ஆன்மீக மையங்களாக இருந்து வந்தன.
எனினும் 15-ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் இருந்து செறிவு கூடிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் கிழக்கு நோக்கி இடம் பெயர்ந்து மேக்கொங் ஆறு, தொன்லே சாப் ஆகிய ஆறுகள் இணையும் பகுதிகளில் உள்ள சக்தோமுக், லோங்வெக், ஒவுடோங் ஆகிய பகுதிகளில் குடியேறினர்.
16 ஆம் நூற்றாண்டின் வளத்துக்கு முக்கிய காரணம் கடல்சார் வணிகம் ஆகும். ஆனால், இதன் விளைவாக, முசுலிம்களான மலாய்கள், சாம்கள் ஆகியோரும்; கிறித்தவ ஐரோப்பிய முயற்சியாளரும், மதம் பரப்புவோரும் அரசாங்க அலுவல்களில் தலையிட்டுக் குழப்பங்களை விளைவித்தனர். செல்வமும், உறுதியான பொருளாதாரமும் ஒருபுறமும்; குழம்பிய பண்பாடு, விட்டுக்கொடுக்கும் ஆட்சியாளர்கள் ஒருபுறமுமாக உள்ள ஒரு நிலையே லோங்வெக் காலம் முழுதும் காணப்பட்டது.
15-ஆம் நூற்றாண்டை அண்டி கெமரின் முன்னைய அயலவரான, மேற்கில் வாழ்ந்த மொன் மக்களையும், கிழக்கில் வாழ்ந்த சாம் மக்களையும் படிப்படியாகப் பின்தள்ளி அவர்களது இடங்களை முறையே தாய் மக்களும், வியட்நாமிய மக்களும் பிடித்துக்கொண்டனர்.
This article uses material from the Wikipedia தமிழ் article கம்போடியாவின் வரலாறு, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.