விதுரன் அஸ்தினாபுரத்தின் அரசிகளான அம்பிகா, அம்பாலிகா ஆகியோரின் பணிப்பெண்ணான பராஷ்ரமி மகன் ஆவார்.
இவர் வியாசருக்கும் அப்பணிப்பெண்ணுக்கும் பிறந்தவர். இவர் திருதராஷ்டிரனுக்கும் பாண்டுவுக்கும் சகோதரன் முறை ஆவார். விதுரன் திருதராஷ்டிரனுக்கு அமைச்சராக இருந்தார். இவர் எம தர்மனின் அவதாரமாக கருதப்படுகிறார்.
ஆணி மாண்டவ்யரின் ஆசிரமத்தில் ஒரு முறை திருடர் கூட்டம் ஒன்று ஒளிந்திருந்தது, அப்போது மாண்டவ்யர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். திருடர்கள் ஒளிந்திருந்தது அவருக்குத் தெரியாது. மன்னனின் பாதுகாவலர்கள் திருடர்களை கண்டுபிடித்தனர். திருடர்களுக்கு உதவியதாக மாண்டவ்யரை சித்ரவதை செய்தனர். பின் அவர் முன் எமன் தோன்றிய போது எவருக்கும் தீங்கு நினைக்காத தனக்கு நேர்ந்த துன்பத்திற்கு விளக்கம் கேட்டார். ஆமாம் நீ சிறுவயதில் பூச்சிகளுக்கு வைக்கோலால் கொடுமை செய்தாய் அதற்கு பலன்தான் இது என்றார் எமன். அறியாத வயதில் செய்த சிறு குற்றத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? இது அநியாயம் என்றார் மாண்டவ்யர். அதுதான் கர்ம வினைப்பயன் என்றார் எமன். மாண்டவ்யர் கோபம் கொண்டு எமனை பார்த்து நீ பூவுலகில் பிறப்பாய் அரசகுலத்தில் பிறந்தாலும் அரியணை ஏற முடியாதவனாக இருப்பாய் என சாபம் கொடுத்தார்.
கௌரவர்கள் அனைவரும் திருமணம் செய்துகொண்டு, வரும் மருமகள்கள் வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் அதனால் பாண்டுவின் மனைவிக்கும் அவள் மகன்களுக்கும் தனியாக ஓர் அரண்மனை கட்டிக் கொடுத்துவிடுவது நல்லது என்று திருதராஷ்டிரனிடம் விதுரன் கூறினார். திருதராஷ்டிரன் சம்மதிக்கவே வாரணாவதத்தில் தனியாக ஒரு மாளிகை கட்ட உத்திரவிடப்பட்டது. கட்டிமுடித்த அந்த மாளிகையை விதுரன் பார்வையிட்ட போது அதிர்ச்சியடைந்தார். அது முழுக்க முழுக்க அரக்கால் கட்டப்பட்டிருந்தது, பயன்படுத்தப்பட்டிருந்த பொருட்கள் எல்லாமே எளிதில் தீப்பற்றக்கூடியவையாக இருந்தன.
விதுரர் குந்தியிடம் சென்று என் சகோதரன் உன்னையும், உன் பிள்ளைகளையும் கொல்லத்திட்டமிட்டிருக்கிறான். உங்களுக்கு ஒரு மாளிகையைப் பரிசாகத் தரப்போகிறான், அதை நீங்கள் ஏற்க மறுக்க முடியாது. நீங்கள் அந்த மாளிகைக்குள் புகுந்ததும் உங்களை எரித்துவிடத் திட்டமிட்டுள்ளான். ஆனால் நீங்கள் பயப்பட வேண்டாம், நீங்கள் பத்திரமாக தப்பிப்பதற்கு மாளிகைக்கு கீழே நான் ஒரு சுரங்கப்பாதை அமைத்திருக்கிறேன். சுரங்கப் பாதை வழியில் போனால் காட்டுக்குள் போய் விட்டுவிடும், கௌரவர்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக மாளிகைக்கு போவதை ஏற்றுக் கொண்டு மாளிகைக்குள் சென்று சுரங்கப் பாதை வழியாக தப்பிச் சென்றுவிடுங்கள். நீங்கள் திரும்பி வரும்போது நியாயம் உங்கள் பக்கம் இருக்கும். பிறகு உங்கள் மகன்களுக்கு உரிமையோடு ஆட்சியைப் பெறமுடியும் என்று கூறினார்.
மாளிகை பாண்டவர்களுக்குக் கொடுக்கப்பட்டது, தாயும் மகன்களும் அதில் குடிபுகுந்தனர். விதுரன் எச்சரித்தபடி அன்று இரவே மாளிகைக்கு தீவைக்கப்பட்டு, மாளிகை முழுதும் எரியத்தொடங்கியது. தாயுடன் பாண்டவர்கள் எந்த காயமுமின்றி சுரங்கப்பாதை வழியே தப்பினர். குடும்பங்களின் சண்டை இன்னும் வலுத்தது. தீ அனைந்ததும் எரிந்து போன ஒரு பெண்ணின் உடலும், ஐந்து இளைஞர்களின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டது. அவை குந்தி மற்றும் பாண்டவர்களின் சடலங்கள் என்றே கருதினர், திருதராஷ்டிரன் அவர்களுக்காகக் கண்ணீர் வடித்தான், காந்தாரியும், துரியோதனனும், துச்சாதனனும் கூட கண்ணீர் விட்டனர். துரோணரும், பீஷ்மரும் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார்கள். விதுரன் வருத்தப்படுவது போல் பாசாங்கு செய்தார். அவருக்கு தெரியும் குந்திக்குப் பதிலாக ஆறுபேர் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு மாளிகைக்குள் விடப்பட்டார்கள், அவர்களுடைய கருகிய உடல்களே அது என்று. இந்த பயங்கர சதி வேறு யாறுக்கு தெரியும் என்ற எண்ண ஓட்டத்துடனே விதுரன் இருந்தார்.
This article uses material from the Wikipedia தமிழ் article விதுரன், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.