நாகசுரம் (Nadaswaram) என்பது துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும்.
இது நாதசுவரம், நாதசுரம், நாகஸ்வரம். நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு. சிறப்பாகத் தென்னிந்தியா, இலங்கை போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த இசைக்கருவி வழக்கில் உள்ளது. திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. வெகு தூரத்தில் இருந்து கேட்டாலும் இன்பத்தைத் தரும் இயல்பினைக் கொண்டது.
சீவாளியுடன் நாகசுரம் | |
வேறு பெயர்கள் | நாதசுவரம் |
---|---|
வகைப்பாடு | காற்று இசைக்கருவி |
தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால், பொதுவாக எல்லாவகையான நன் நிகழ்வுகளிலும் இதற்கு ஒரு இடம் உண்டு. வசதியான பெரிய கோயில்களில் அன்றாடம் இது பல தடவைகள் இசைக்கப்படுவது வழக்கம். ஏனையவற்றில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளின் போது பயன்படுகின்றது. தவிரவும், தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாகசுவரம் சிறப்பிடம் பெறுகின்றது.
இவ்வாத்தியம் முன்பு தென்னிந்தியாவிலுள்ள நாகூர், நாகபட்டிணம் முதலிய ஊர்களில் உள்ளவர்களான, நாகசர்பத்தைத் தெய்வமாகப் பூசித்த நாகர் என்ற சாதியரினால் வாசிக்கப்பட்டு வந்தது. நாகத்தின் போன்று உருவத்தைப் போன்று நீண்டிருந்ததின் காரணமாகவும் நாதசுவரம் என்னும் பெயர் ஏற்பட்டது. இதனுடைய இனிமையான நாதம் காரணமாக பிற்காலத்தில் இது நாதஸ்வரம் எனப்பட்டது.
பல்லாண்டுகளாக திமிரி என்னும் நாகசுவரமே வாசிக்கப்பட்டது. இதன் நீளம் குறைவாக இருக்கும். இதில் சில மாற்றங்களோடு நாகசுவர மேதை டி. என். ராஜரத்தினம் பிள்ளை அறிமுகப்படுத்தியதுதான் தற்போது புழக்கத்தில் உள்ள பாரி நாகசுவரம் ஆகும். திமிரி நாகசுவரத்தைவிட பாரி நாகசுவரம் நீளமாக இருப்பதுடன், இசைக் கலைஞர்களால் நீண்ட நேரம் வாசிக்க சுருதி அளவுடன் இருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.
நாகசுரம் ஒரு பண்டைத் தமிழ் இசைக்கருவியாகத் தெரியவில்லை. சங்ககாலத் தமிழ் இலக்கியங்களோ அல்லது இடைக்கால இலக்கியங்களோ இந்த இசைக்கருவி தொடர்பான தகவல் எதையும் தரவில்லை. சிலப்பதிகாரத்தில் கூறப்படும் வங்கியம் என்னும் இசைக்கருவியுடன் இதனைத் தொடர்புபடுத்தச் சிலர் முயன்ற போதிலும் அது புல்லாங்குழல் போன்ற ஒரு கருவியே என்று பலர் கருதுகிறார்கள். இசைக் கலைஞர்கள் பற்றிக் குறிப்பிடுகின்ற கல்வெட்டுக்களிலும் இது பற்றிய குறிப்புக்களோ அல்லது அதனோடு தொடர்புடைய இசைக் கலைஞர் பற்றிய குறிப்புக்களோ இதுவரை கிடைக்கவில்லை. அத்துடன் இதன் துணை இசைக்கருவியாக விளங்குகின்ற தவிலும் கூட இத் தகவல் மூலங்கள் எதிலும் காணக் கிடைக்கவில்லை.
17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதசங்கிரகம் என்னும் இசை நூல் துளைக் கருவிகள் பற்றிக் கூறுகின்ற போது இக் கருவியையும் நாகசுரம் என்ற பெயரில் பட்டியல் இடுகின்றது. இதுவே தற்போதைய நிலையில், கிடைக்கின்ற முதல் வரலாற்றுக் குறிப்பு எனலாம்.
இது வட இந்தியக் குழல் இசைக்கருவியான ஷெனாய் போன்றது ஆகும். எனினும் இது ஷெனாயை விட அளவில் பெரியது. இது வன்மரத்தினால் செய்யப்பட்ட உடலையும், மரத்தினால் அல்லது உலோகத்தினால் செய்யப்படும் விரிந்த அடிப் பகுதியையும் கொண்டது. நாதசுவரம் ஆச்சாமரம் என்னும் மரத்தால் செய்யப்படுகின்றது. இதன் பாகங்கள் வருமாறு:
உடலின் மேற்பாகத்தில் 12 துளைகள் உள்ளன. மேலிருந்து வரும் 7 துளைகளும் இசைப்பதற்கு ஏற்றவை. மற்றைய ஐந்தையும் அவ்வப்போது மெழுகால் அடைத்தும் திறந்தும் கொள்வார்கள். நாதசுவரத்தின் நீளம் சுமார் 2.5 அடி.
நாதசுரத்திற்கு சுருதி கருவியாக விளங்குவது ஒத்து என்ற நாதசுவரத்தைப் போன்றவடிவமுள்ள ஒரு கருவி. இதிலிருந்து ஆதார சுருதி மட்டும் தான் வெளிவரும். இதனை ஒருவர் வாயில் வைத்து, தொடர்ச்சியான ஒலியை எழுப்பி வருவார். இன்று இந்தக்கருவிக்குப் பதிலாக சுருதிப்பெட்டி பயன்படுத்தப்படுகின்றது.
நாதசுவரத்துக்கு தாளக் கருவியாக அமைவது தவில் (அல்லது தவுல்) என்ற தோற்கருவியாகும். இதனால் நாதசுவர இசைக்கலைஞர்கள் பொதுவாகத் தவில் இசைக் கலைஞருடன் சேர்ந்து குழுக்களாகவே செயல்படுவது வழக்கம். நாதசுவரக் கலைஞர், ஒத்து வாசிப்பவர், தவில் வித்துவான், தாளக் கலைஞர் (ஜால்ரா) ஆகிய நால்வரும் ஒன்று சேர்ந்த இசைக்குழுவைப் பெரியமேளம் என அழைப்பர்
நாகசுவர வாசிப்பில் மல்லாரி வாசிப்பது என்ற ஒரு முறை உள்ளது. இது குரு சிஷ்ய பாரம்பரியத்தில் கற்பிக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது. கோயில்களில் தெய்வத் திருமேனிகளுக்கு திருமஞ்சனம் செய்யும்போது தீர்த்த மல்லாரி, திருமஞ்சனம் முடிந்து அலங்கரிக்கப்பட்ட பின் திருவமுது படைக்கும்போது தளிகை மல்லாரி, இறைவன் எழுந்தருளும்போது பெரிய மல்லாரி, சின்ன மல்லாரி ஆகியவை நாகசுவரத்தில் வாசிக்கப்படும். மல்லாரி வாசிக்கப்படும் ஒழுங்கைக் கொண்டே கோயிலுக்கு வெளியே உள்ளவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
நாதசுவரக் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படும். இம்மரமும் வெட்டப்பட்டு நீண்ட நாட்களுக்குப் பிறகே இக்கருவி செய்யப் பயன்படும். இதனால் பழைமையான வீடுகளில் கட்டடமாக இருந்து, பிரிக்கப்பட்ட பொழுது இம்மரத்தை வாங்கி வந்து, இக்கருவியைச் செய்வர். இக்கருவியின் மேல் பகுதியை உளவு என்றும், கீழ்ப்பகுதியை அணசு என்றும் கூறுவர். உளவுப் பகுதியில் 12 துளைகள் அமைக்கப்படும். இக்கருவியின் அளவிற்கேற்ப, முகவீணை, திமிரி நாயனம், பாரி நாயனம், இடைப்பாரி நாயனம், மத்திம சுருதி நாயனம் என்ற பெயர்களுடன் வழங்கி வருகின்றனர்.
நாதசுவரம் குழல், திமிரு மற்றும் அனசு எனும் மூன்று பாகங்களைக் கொண்டது. இது ஏறத்தாழ கூம்பு வடிவிலான மரமாகும். கீழ் பகுதியிலிருந்து மேல் நோக்கி சிறிது சிறிதாக குறைந்து இவ் வடிவத்தினை இது பெறுகின்றது. மேல் பகுதி வாய் வைத்து ஊதுவதற்கு ஏற்ற உலோக உருண்டை அமையப்பெற்று இருக்கும். பல ஓய்வு நாணல்களும் நாதஸ்வரத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். அவற்றுடன் சிறு தந்ததினாலான் கூம்பு இருக்கும் இவை நாணலினில் உள்ள எச்சில் மற்றும் தூசு குப்பைகளை நீக்கி சரியான காற்று போகும் அளவுக்கு திருத்த கொடுக்கப்பட்டிருக்கும். இவற்றுடன் ஒரு உலோக மணியும் பொருத்தப்பட்டிருக்கும். பாரம்பரியமாக நாதஸ்வரத்தின் உடல் வன்மரத்தினால் செய்யப்பட்டது. ஆனால் தற்போது மூங்கில், சந்தனமரம், தாமிரம், பித்தளை, கருங்காலி மற்றும் ஐவரி ஆகியவற்றிலும் செய்து பயன்படுத்தப்படுகின்றன. நாதஸ்வரத்தில் ஏழு விரல் துளைகளும், ஐந்து கூடுதல் ஓட்டைகளும் போடப்பட்டிருக்கும். ஐந்து கூடுதல் ஓட்டைகளையும் தேவையானபொழுது பயன்படுத்திக்கொள்ள மெழுகு கொண்டு அடைத்திருப்பர். பான்சூரி புல்லாங்குழல் போன்று இரண்டரை எல்லை ஓட்டைகளும் போடப்பட்டு இருக்கும்.
நாதசுவரத்தின் மேல் பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படும். ஜீவ வளி என்பதுதான் சீவாளியாகியிருக்கிறது. ஜீவன் என்றால் உயிர். வளி என்றால் காற்று. உடலாகிய நாதஸ்வரத்திற்கு காற்றின் மூலம் சீவாளி உயிர் கொடுக்கிறது. இது ஒரு வகை நாணல் என்ற புல் வகையால் செய்யப்படும். இந்த நாணலைக் ‘கொறுக்கைத் தட்டை’ என்பர். இதனை ஆற்றங்கரையிலிருந்து கொண்டு வந்து காயப்போட்டு ஒரு வருடம் ஆனதும் நெல் வேகவைக்கும் போது கூட வேக வைத்து, நீராகாரத்தில் ஊறவைத்து மிருதுவாக்கி சுதிக்கு ஏற்ப அதை வெட்டி சீவாளி தயாரிக்கிப்படுகிறது. இச்சீவாளியையும் நாதசுவரத்தையும் இணைக்கும் கெண்டை என்ற பகுதி சீவாளியோடு இணைக்கப்பட்டிருக்கும்.
நாதஸ்வரம் நாதஸ்வரம் ஒரு இசைக்கருவி ஆகும். இதில் இசை உருவாதற்கு சீவாளி, நாதஸ்வரக் குழலில் அமைந்திருக்கும் துளைகள் காரணமாகின்றன. சீவாளியில் அமைந்திருக்கும் மெல்லிய இடைவெளியில் வாயிலிருந்து காற்று அனுப்பப்படுகிறது. இதனால் சீவாளியினால் அடிப்படை சுரம் உருவாக்கப்படுகிறது. நாதஸ்வரக் குழலில் இருக்கும் துறைகளைப் பயன்படுத்தி, நாதஸ்வர குழலினுள் இருக்கும் காற்றின் அளவு மாற்றியமைக்கப்படுகிறது. இதன் விளைவாக காற்று பலவித சுர, நாத வேறுபாடுகளைக் கொண்ட இசையாக மாறுகிறது.
நாதசுவரத்தில் இரண்டு வகைகள் உண்டு: திமிரி, பாரி. திமிரி நாதசுவரம் உயரம் குறைவாகவும், ஆதார சுருதி அதிகமாகவும் இருக்கும். பாரி நாதசுவரம் உயரம் அதிகமாகவும், ஆதார சுருதி குறைவாகவும் இருக்கும்.
நாதசுவரம் மங்கல இசைக்கருவியாக பயன்படுகிறது. கோவில்கள் சுப நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்த ஏற்ற இசைக்கருவியாகும். நாதசுவரங்கள் உட்புற நிகழ்ச்சிகளை விட திறந்த வெளிகளில் பயன்படுத்த மிகவும் ஏற்றதாகும். ஏனெனில் இவற்றின் இசை பெருக்கும் திறன் அதிகமாகும்.
தொகு | தமிழிசைக் கருவிகள் |
---|---|
தோல் கருவிகள் | ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி |
நரம்புக் கருவிகள் | வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம் | கின்னாரம் |
காற்றிசைக் கருவிகள் | கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம் |கொக்கரை |
கஞ்சக் கருவிகள் | தாளம் | சேகண்டி | |
பிற | கொன்னக்கோல் | கடம் | |
This article uses material from the Wikipedia தமிழ் article நாகசுரம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.