டி.
எஸ். பாலையா (ஆகத்து 23, 1914 - சூலை 22, 1972), தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். திருநெல்வேலியைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன.
டி. எஸ். பாலையா | |
---|---|
பிறப்பு | எஸ். பாலையா ஆகத்து 23, 1914 சுண்டங்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் |
இறப்பு | சூலை 22, 1972 (அகவை 57) |
செயற்பாட்டுக் காலம் | 1936 - 1972 |
தந்தை பெயர் சுப்பிரமணிய பிள்ளை. இளம் வயதிலேயே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பல நாடக கம்பெனிகளில் சேர்ந்து, பல்வேறு வேடங் களில் நடித்து, சிறந்த நடிகராக உருவானார். ‘‘பதி பக்தி’’ என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, அவர் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. கோவையைச் சேர்ந்த ஏ.என்.மருதாசலம் செட்டியார், தன் மூன்று நண்பர்களுடன் சேர்ந்து ‘மனோரமா பிலிம்ஸ்’ என்ற படக்கம்பெனியை தொடங்கினார். ‘‘ஆனந்த விகடன்’’ ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன் எழுதிய ‘‘சதிலீலாவதி’’ என்ற கதையை படமாக்க அவர் தீர்மானித்தார். இந்த கதைக்கும், ‘பதிபக்தி’ நாடகக்கதைக்கும் நிறைய ஒற்றுமை இருந்தது. நாடகத்தில் எந்த மாதிரியான வேடத்தில் பாலையா நடித்தாரோ, அதே மாதிரியான வேடத்தில் அவரை 1936 இல் வெளியான ‘‘சதிலீலாவதி’’யில் நடிக்க வைத்தார் மருதாசலம் செட்டியார். எல்லிஸ் ஆர். டங்கன் இந்தப்படத்தை இயக்கினார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. துவக்க காலங்களில் வில்லன் வேடங்களில் முத்திரை பதித்தார். பிற்காலங்களில் நகைச்சுவை வேடங்களிலும் புகழ் பெற்றார்.
‘‘சதிலீலாவதி’’க்கு பிறகு பாலையா நடித்த படம் ‘‘இரு சகோதரர்கள்’’. இந்தப்படத்தையும் எல்லிஸ் ஆர். டங்கனே இயக்கினார். இந்தப்படத்திலும் பாலையாவின் நடிப்பு பாராட்டப்பட்டது. 1937–ம் ஆண்டில் ‘‘சதி அனுசுயா’’ என்ற படத்தில் நடித்தார்.
1937 இல் எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்த ‘அம்பிகாபதியில்’ வில்லனாக நடித்திருந்தார், பாலையா. எல்லிஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்த இந்தப்படம், மாபெரும் வெற்றி பெற்ற படமாக அமைந்தது. பிறகு ‘பம்பாய் மெயில்’, ‘உத்தமபுத்திரன்’ (பி.யூ.சின்னப்பா), ‘பூலோக ரம்பை’, ‘ஆர்யமாலா’, ‘பிருதிவிராஜன்’, ‘மனோன்மணி’, ‘ஜகதலப்பிரதாபன்’, ‘சாலி வாஹனன்’, ‘பர்மா ராணி’, ‘மீரா’ முதலிய படங்களில் நடித்தார்.
1946–ம் ஆண்டு, பாலையாவின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க வருடமாகும். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘‘சித்ரா’’ படத்தில் பாலையா கதாநாயகனாக நடித்தார். கதாநாயகியாக நடித்தவர் கே. எல். வி. வசந்தா. இந்தப்படத்திற்கு பிறகு பாலையா நடித்த படம் ‘வால்மீகி’. ஹொன்னப்ப பாகவதரும், டி.ஆர்.ராஜகுமாரியும் இணைந்து நடித்த இப்படத்தில், பாலையா வில்லனாக நடித்தார்.
பிறகு, 1947–ம் ஆண்டு பாலையா மீண்டும் கதாநாயகனாக நடித்த படம் ‘‘செண்பகவல்லி’’. இதில் கதாநாயகியாக நடித்தவர் எம். எஸ். விஜயாள். எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படமான ‘ராஜகுமாரியில் வில்லனாக நடித்தார் பாலையா. இருவரும் போடும் கத்திச்சண்டை படத்தின் சிறப்பு அம்சமாக விளங்கியது.
ஜூபிடர் தயாரிப்பான ‘மோகினி’ என்ற படத்தில் இரண்டு கதாநாயகர்கள். ஒருவர் எம்.ஜி.ஆர். மற்றொருவர் பாலையா. பாலையாவின் ஜோடி மாதுரி தேவி. பிறகு ‘மாரியம்மன்’, ‘நாட்டிய ராணி’, ‘விஜயகுமாரி’, ‘ஏழைபடும்பாடு’, ‘சந்திரிகா’ முதலிய படங்களில் நடித்தார்.
1950–ம் ஆண்டு பட்சிராஜா ஸ்டூடியோ ‘‘பிரசன்னா’’ என்ற மலையாள படத்தை தயாரித்தனர். அதில், லலிதா கதாநாயகியாகவும் பத்மினி இரண்டாவது கதாநாயகியாகவும் நடித்தனர். லலிதாவுக்கு ஜோடியாக டி.எஸ்.பாலையா நடித்தார்.
பாலையாவுக்கு நல்ல குரல் வளம் உண்டு. ஆரம்பகாலத்தில், பல படங்களில் அவர் சொந்தக்குரலில் பாடியுள்ளார். ‘‘பிரசன்னா’’ விலும் ஒரு மலையாளப்பாடலை சொந்தக் குரலில் பாடினார்.
This article uses material from the Wikipedia தமிழ் article டி. எஸ். பாலையா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.