முத்துவேல் கருணாநிதி (M.
Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018) இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969,1971,1989,1996,2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு, 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இவர் முத்தமிழஞர் என்றும் அழைக்கப்படுகின்றார். இவர் இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2018 ஆகத்து 7-ஆம் நாள் தம்முடைய 94-ஆம் அகவையில் சென்னையில் காலமானார்.
கலைஞர் மு. கருணாநிதி | |
---|---|
3-ஆவது தமிழ்நாடு முதலமைச்சர் | |
பதவியில் 13 மே 2006 – 15 மே 2011 | |
Deputy | மு.க.ஸ்டாலின் (2009 முதல்) |
முன்னையவர் | ஜெ. ஜெயலலிதா |
பின்னவர் | ஜெ. ஜெயலலிதா |
தொகுதி | சேப்பாக்கம் |
பதவியில் 13 மே 1996 – 13 மே 2001 | |
முன்னையவர் | ஜெ. ஜெயலலிதா |
பின்னவர் | ஜெ. ஜெயலலிதா |
தொகுதி | சேப்பாக்கம் |
பதவியில் 27 சனவரி 1989 – 30 சனவரி 1991 | |
முன்னையவர் | வி. என். ஜானகி |
பின்னவர் | ஜெ. ஜெயலலிதா |
தொகுதி | துறைமுகம் |
பதவியில் 15 மார்ச் 1971 – 31 சனவரி 1976 | |
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
தொகுதி | சைதாப்பேட்டை |
பதவியில் 10 பெப்ரவரி 1969 – 4 சனவரி 1971 | |
முன்னையவர் | சி. என். அண்ணாதுரை |
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
தொகுதி | சைதாப்பேட்டை |
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 15 மே 2011 – 7 ஆகத்து 2018 | |
முன்னையவர் | உ. மதிவாணன் |
பின்னவர் | கே. பூண்டி கலைவாணன் |
தொகுதி | திருவாரூர் |
தலைவர் - திராவிட முன்னேற்றக் கழகம் | |
பதவியில் 27 ஜூலை 1969 – 8 ஆகஸ்ட் 2018 | |
முன்னையவர் | நிலை நிறுவப்பட்டது |
பின்னவர் | மு. க. ஸ்டாலின் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திருக்குவளை, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம்) | 3 சூன் 1924
இறப்பு | 7 ஆகத்து 2018 சென்னை, தமிழ்நாடு | (அகவை 94)
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
பிற அரசியல் தொடர்புகள் | நீதிக்கட்சி, திராவிடர் கழகம் (1949க்கு முன்னர்) |
துணைவர்(s) | பத்மாவதி தயாளு இராசாத்தி |
உறவுகள் | பார்க்க கருணாநிதி குடும்பம் |
பிள்ளைகள் | 6, முத்து, அழகிரி, ஸ்டாலின், கனிமொழி உட்பட |
வாழிடம் | கோபாலபுரம் (சென்னை) |
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 சூன் 3-இல் ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார் கருணாநிதி. இவருக்கு இரு சகோதரிகள் இருந்தனர். தொடக்கக் கல்வியைத் திருக்குவளையில் பெற்றார். பின்னர்த் திருவாரூரிலிருந்த மாவட்ட நாட்டாண்மைக்கழக உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றார். அங்கு இவருக்குத் தமிழாசிரியராக இருந்தவர் சி. இலக்குவனார். பள்ளியிறுதித் தேர்வில் இவர் தேர்ச்சியடையவில்லை.
கருணாநிதி, தமது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தமது வளரிளம் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் திருவாரூர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்னும் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை 7-7-1944 அன்று உருவாக்கினார். அவரே அதன் தலைவராக மு.கருணாநிதியும் அமைச்சராக கே.வெங்கிடாசல என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. அதன் வழியாக மாணவநேசன் என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையை வெளியிட்டு இளைஞர்களைத் திரட்டினார். சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான "அனைத்து மாணவர்களின் கழகம்" என்ற அமைப்பாக உருப்பெற்றது. கருணாநிதி, மற்ற உறுப்பினர்களுடனான சமூகப் பணியில் மாணவர் சமூகத்தையும் ஈடுபடுத்தினார்.
முரசொலி என்னும் துண்டு வெளியீட்டை 1942-ஆம் ஆண்டில் வெளியிட்டார். முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோரை அழைத்து தம் மாணவர் மன்ற அணித்தோழர்களுடன் கொண்டாடினார். இடையில் சில காலம் அவ்விதழ் தடைபட்டது. பின்னர் 1946 முதல் 1948 மாத இதழாக நடத்தினார். சற்றொப்ப 25 இதழ்கள் வரை வந்து மீண்டும் இதழ் தடைபட்டது. மீண்டும் 1953-இல் சென்னையில் மாத இதழாகத் தொடங்கினார். 1960-ஆம் ஆண்டில் அதனை நாளிதழாக மாற்றினார்.
நீதிக்கட்சியின் தூணாகக் கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14-ஆவது அகவையில், அரசியல், சமூக இயக்கங்களில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கருணாநிதி, தமிழ் அரசியலில் களமிறங்குவதற்கு உதவிய முதல் பிரதான எதிர்ப்பு, கல்லக்குடி ஆர்ப்பாட்டத்தில் (1953) ஈடுபட்டது ஆகும். இந்தத் தொழிற்துறை நகரத்தின் அசல் பெயர் கல்லக்குடி. இது வட இந்தியாவில் இருந்து ஒரு சிமெண்ட் ஆலை ஒன்றை உருவாக்கிய சிம்மோகிராம் பிறகு டால்மியாபுரம் என மாற்றப்பட்டது. தி.மு.க. அந்தப் பெயரைக் கல்லக்குடி என மீண்டும் மாற்ற வேண்டுமென விரும்பியது. கருணாநிதி மற்றும் அவருடைய தோழர்கள் இரயில் நிலையத்திலிருந்த டால்மியாபுரம் என்ற பெயரை அழித்தனர். மேலும் இரயில் மறியலிலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் இருவர் இறந்தனர், கருணாநிதி கைது செய்யப்பட்டார்.
1957-இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் நடுவண் அரசால் இந்தி, திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13, 1957 அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது. இப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய கருணாநிதி நடுவண் அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து, "மொழிப்போராட்டம்.. எங்கள் பண்பாட்டைப் பாதுகாக்க, இஃது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்களது கட்சியின் அரசியல் கொள்கை.. மேலும் இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு (எடுப்பு சாப்பாடு), ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்று முழக்கமிட்டார்.
அக்டோபர், 1963, இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் (மதராஸ்) கூட்டப்பட்டது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடுவண் அரசின் புரிந்து கொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று அண்ணாதுரையும், நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யப்பட்டு 25 நவம்பர் அன்று உயர் நீதிமன்ற ஆணையால் விடுவிக்கப்பட்டனர்.
1960-ஆம் ஆண்டில் தி.மு.க.வின் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1969-ஆம் ஆண்டு வரை அப்பதவியை வகித்தார்.
1969-ஆம் ஆண்டில் தி.மு.க.வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது மறைவு வரை 50 ஆண்டுகள் அப்பதவியை வகித்தார்.
போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் இவர் வெற்றிபெற்றார். 1957-ஆம் ஆண்டு சுயேச்சையாகவும் மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் தி.மு.க. வேட்பாளராகவும் போட்டியிட்டார். மேலவை உறுப்பினரானதால் 1984-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
ஆண்டு | தொகுதி | வாக்கு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்கு | வாக்கு வேறுபாடு |
1957 | குளித்தலை | 22785 | கே.எ. தர்மலிங்கம் | காங்கிரசு | 14489 | 8296 |
1962 | தஞ்சாவூர் | 32145 | ஏ.ஒய்.எஸ்.பரிசுத்த நாடார் | காங்கிரசு | 30217 | 1928 |
1967 | சைதாப்பேட்டை | 53401 | எஸ்.ஜி.வினாயகமூர்த்தி | காங்கிரசு | 32919 | 20482 |
1971 | சைதாப்பேட்டை | 63334 | என்.காமலிங்கம் | காங்கிரசு | 50823 | 12511 |
1977 | அண்ணா நகர் | 43076 | ஜி.கிருஷ்ணமூர்த்தி | அ.தி.மு.க. | 16438 | 16438 |
1980 | அண்ணா நகர் | 51290 | எச். வி. அண்டே | அ.தி.மு.க. | 50591 | 699 |
1989 | துறைமுகம் | 41632 | கே.எ.வகாப் | முஸ்லீம் லீக் | 9641 | 31991 |
1991 | துறைமுகம் | 30932 | கே.சுப்பு | காங்கிரசு | 30042 | 890 |
1996 | சேப்பாக்கம் | 46097 | நெல்லைக் கண்ணன் | காங்கிரசு | 10313 | 35784 |
2001 | சேப்பாக்கம் | 29836 | தாமோதரன் | காங்கிரசு | 25002 | 4834 |
2006 | சேப்பாக்கம் | 34188 | தாவூத் மியாகான் | சுயேச்சை | 25662 | 8526 |
2011 | திருவாரூர் | 109014 | எம்.இராசேந்திரன் | அ.தி.மு.க. | 58765 | 50249 |
2016 | திருவாரூர் | 121473 | பன்னீர்செல்வம் | அ.தி.மு.க. | 53107 | 68366 மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசம் |
இலங்கைத் தமிழருக்காகக் கருணாநிதியும் அன்பழகனும் தமது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினர். அடுத்துவந்த சட்டமேலவைத் தேர்தலில் கருணாநிதி சட்டமேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1962 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் அமைந்த மூன்றாவது சட்டப்பேரவையில், இரா. நெடுஞ்செழியன் எதிர்க்கட்சித் தலைவராகவும், மு. கருணாநிதி எதிர்க்கட்சித் துணைத்தலைவராகவும் இருந்தார்.
1967-ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியைப் பிடித்த பின்னர் கா. ந. அண்ணாதுரை தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
என ஐந்துமுறை முதலமைச்சராக இருந்தார்.
மாநிலத்தின் வளர்ச்சிக்காகக் கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இலவச காப்பீடு திட்டங்கள், தொழில்மயமாக்குதலுக்கான நடவடிக்கைகள் போன்ற பலவற்றையும் மேற்கொண்டார். தகவல் தொழில்நுட்பத் துறையை மாநிலத்தில் வளர்க்கும் விதமாக, அவருடைய பதவிக் காலத்தில், டைடல் மென்பொருள் பூங்காவை உருவாக்கினார். ஒரகடத்தில், புதிய உழுவை உற்பத்தி செய்யும் செல்லைத் தொடங்கினார். மஹிந்திரா மற்றும் நிசான் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த அமைப்பின் கீழ் செயல்படுகிறது.
1972 இல் விவசாயிகள் போராட்டத்தில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள்.[சான்று தேவை] 1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி வீராணம் ஊழல் புகார் இலஞ்சத்தை காரணமாகக் காட்டி கலைக்கப்பட்டு ஆளுனர் ஆட்சிஅமல்படுத்தப்பட்டது. 1973 ல் மிசா 1975 சூன் மாதத்தில் நெருக்கடிக்கால அறிவிப்பை அப்பொழுதய இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அமல்படுத்தினார். 1977 ஆம் ஆண்டு அவசர நிலை முடிந்த பிறகு மதுரைக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது திமுகவினர் அவரை கடுமையாக தாக்கினார்கள். சென்னைக்கு வந்தபோதும் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள்.[சான்று தேவை] காங்கிரசை கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, தொடக்க காலத்தில் பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, பொதுமக்களின், குறிப்பாக ஊடகங்களின், விமர்சனத்திற்கு உள்ளானது.[சான்று தேவை]
தமிழகச் சட்டப்பேரவையில் 1977 முதல் 1983 வரை சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
மனைவியர் | மக்கள்' |
---|---|
பத்மாவதி (மறைவு: 12-4-1948) | மு. க. முத்து |
தயாளு அம்மாள் | மு. க. அழகிரி மு. க. ஸ்டாலின் செல்வி மு. க. தமிழரசு |
ராசாத்தி அம்மாள் | கனிமொழி |
கருணாநிதி புலால் உணவுகளை உண்பவராக இருந்து பின் தாவர உணவு முறையை பின்பற்றுபவரானார். இவர் அரசியல் பணிகளையும் எழுத்துப் பணிகளையும் ஓய்வின்றிக் செய்ய முடிந்ததற்கு நாளும் யோகப் பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தமையே காரணமாகக் கூறப்படுகிறது.
இவர் 75 திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். 15 நாவல்களையும் 20 நாடகங்களையும் 15 சிறுகதைகளையும் 210 கவிதைகளையும் படைத்துள்ளார். மேலும் "நண்பனுக்கு", "உடன்பிறப்பே" என்னும் தலைப்புகளில் 7000-இக்கும் மேற்பட்ட மடல்களை எழுதியிருக்கிறார். கரிகாலன் என்னும் பெயரில் கேள்வி-பதில் எழுதியிருக்கிறார். இவை, தவிர தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களை எழுதியிருக்கிறார். இவரின் படைப்புகள் 178 நூல்களாக வெளிவந்திருக்கின்றன.
20 வயதில், ஜுபிடர் பிக்சர்ஸ்-ன் திரைக்கதை எழுத்தாளராகப் பணியாற்றினார். அவரது முதல் படமான ராஜகுமாரி என்னும் படத்தால் மிகவும் பிரபலமடைந்தார். ஒரு திரைக்கதை எழுத்தாளர் போன்ற திறமைகளை அவர் பல திரைப்படங்களுக்கு விரிவுபடுத்தினார். 60 திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார்.
இவர் தனது வாழ்க்கைவரலாற்றை நெஞ்சுக்கு நீதி என்னும் தலைப்பில் தினமணி கதிர் (முதலாவது பகுதி), முரசொலி, குங்குமம் ஆகிய இதழ்களில் தொடர்கட்டுரையாக எழுதினார். பின்னர் அக்கட்டுரைத்தொடர் அதேபெயரில் 4165 பக்கங்களில் ஆறு பாகங்களைக் கொண்ட நூலாக வெளிவந்துள்ளது.
1957 முதல் 2018-ஆம் ஆண்டு வரை கருணாநிதி சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் 12 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன.
2016-ஆம் ஆண்டு முதல் சுவாசக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த கருணாநிதிக்கு ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை, அதனை மாற்றுவதற்காக மருத்துவமனைக்குச் சென்று உடலைப் பரிசோதித்து வந்தார். அதன் பிறகு கருணாநிதி உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாகக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகத் தனியார் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்பிறகு, 24 மணி நேரமும் மருத்துவர்கள் அடங்கிய குழு கருணாநிதியை வீட்டிலேயே கண்காணித்து வந்தனர். பின்பு கருணாநிதியின் உடலில் நலிவு அதிகமானதை அடுத்து, சூலை 27, 2018 அன்று நள்ளிரவில் இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு சூலை 29, 2018 அன்று கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாகக் கூறப்பட்டது. அதன் பின்பு ஆகத்து 06, 2018 அன்று இவரின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அதற்கு மறுநாள் ஆகத்து 07, 2018 அன்று சிகிச்சை பலனின்றிச் சென்னையில் காலமானார்.
This article uses material from the Wikipedia தமிழ் article மு. கருணாநிதி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.