மார்க்கோ போலோ (Marco Polo) என்பவர் 1254 ஆம் ஆண்டு முதல் சனவரி 8–9, 1324 வரை வாழ்ந்த ஒரு வெனிசு நகரத்தைச் சேர்ந்த வர்த்தகப் பயணி ஆவார்.
இவருடைய பயண அனுபவங்களை ஒரு நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் புத்தகமே சீனாவைப் பற்றியும் அதன் தலைநகரான பெய்கிங் பற்றியும், பிற ஆசிய நாடுகள், நகரங்கள் பற்றியும் ஐரோப்பியர்கள் அறிந்து கொள்வதற்கு பெரிதும் உதவியாக இருந்தது. ஒரு இத்தாலிய வணிகரான இவர். மங்கோலிய ஆட்சிக்காலத்தில் சீனாவிற்குச் சென்றார். இவருடைய கதைகள் ஐரோப்பியர்களால் விரும்பிப் படிக்கப்பட்டன.
மார்க்கோ போலோ Marco Polo | |
---|---|
மார்க்கோ போலோவின் உருவப்படம் (16ம் நூற்றாண்டு ஓவியம்) | |
பிறப்பு | ஏறத்தாழ 1254 வெனிசு |
இறப்பு | சனவரி 8, 1324 வெனிசு, வெனிசியக் குடியரசு | (அகவை 69)
கல்லறை | சான் லொரென்சோ தேவாலயம், வெனிசு 45°15′41″N 12°12′15″E / 45.2613°N 12.2043°E |
பணி | வணிகர், நாடுகாண் பயணி |
அறியப்படுவது | மார்க்கோ போலோவின் பயணங்கள் |
பெற்றோர் | தந்தை: நிக்கொலோ போலோ |
வாழ்க்கைத் துணை | டாண்டா படோவர் |
தந்தை, மாமா நிக்கோலோ மற்றும் மாஃபியோ ஆகியோரிடமிருந்து போலோ வர்த்தக வியாபாரத்தை கற்றுக்கொண்டார். இவர்கள் ஆசியா வழியாகப் பயணம் மேற்கொண்டு குப்ளாய்கானை சந்தித்தனர். 1269 ஆம் ஆண்டில் அவர்கள் வெனிசுக்குத் திரும்பி வந்து முதன்முறையாக மார்கோபோலோவைச் சந்தித்தனர். ஆசிய சாதனைப் பயணத்திற்காக கப்பல் ஏறிய இவர்கள் 24 ஆண்டுகள் கழித்து வெனிசு திரும்பியபோது அந்நகரம் கெனோவாவுடன் போருக்கு ஆளாகியிருந்தது. சிறையில் அடைபட்டிருந்த மார்கோபோலோ சிறைத்தோழரிடம் தன்னுடைய கதைகளைக் கூறிக்கொண்டிருப்பார். 1299 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்ட இவர் மிகப்பெரிய வியாபாரியாக வளர்ச்சி கண்டார். திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளுக்கு தந்தையானார். 1324 இல் மரணமடைந்த போலோ வெனிசு நகரிலுள்ள சான் லொரென்சோ பேராலயத்தில் புதைக்கப்பட்டார்.
இவரின் பிறப்பிடமான வெனிசு நகரத்தில் இவரின் குடும்பம் மிகுந்த செல்வாக்கினை அக்காலத்தில் பெற்றிருந்தது. அதன் காரணம் இவரின் தந்தையான நிக்கோலோ போலோவும், சிறிய தந்தையான மஃபெயா போலோவும் வெனிசு நகரின் முக்கிய வணிகர்களாவர். மேலும் வெனிசு நகர பெருஞ்சபையில் முக்கிய உறுப்பினர்களாகவும் இருந்தனர். மார்க்கோ போலோவின் மற்றொரு சிறிய தந்தை கான்சுடன்டீனோபிலிலும் கிரிமியாவிலும் முக்கிய வணிகராய் இருந்தவர்.
1271 இல் இவர் தனது தந்தை நிக்கோலா, உறவினர் மாப்பியோ ஆகியோருடன் பட்டுப் பாதை வழியே மத்திய கிழக்கு, மத்திய ஆசியா கடும் பாலைவனங்கள் மலைகள் போன்றவற்றைக் கடந்து சீனா சென்று செங்கிசுக்கானின் பேரனான குப்ளாய் கான் மன்னனைச் சந்தித்தார். அங்கு 17 ஆண்டுகள் குப்ளாய் கானுக்கு உதவியாக இருந்தார். குப்ளாய் கானின் நன்மதிப்பைப் பெற்ற மார்க்கோ போலோ பேரரசின் எந்தப் பகுதிக்கும் சென்றுவர அரச முத்திரை வழங்கப்பட்டது. ஏனையோருக்குச் செப்பு, இரும்பு போன்ற உலோகங்களினால் முத்திரை வழங்கப்பட்டாலும் மார்க்கோ போலோவிற்குக் குப்ளாய்கான் தங்கத்திலான அரச முத்திரையை வழங்கினான். இந்த முத்திரையின் உதவியுடன் மார்க்கோ போலோ மங்கோலியப் பேரரசின் எந்த ஒரு பிரதேசத்திற்கும் செல்லக்கூடியதாக இருந்தது.
பெரும் செல்வம் ஈட்டிய மார்க்கோ போலோ மற்றும் அவர் தந்தையார் முதலியவர்கள் மொங்கோலியப் பேரரசில் இருந்து புறப்பட்டு தமது நகரமான வெனிசிற்குச் செல்ல முற்பட்டாலும் இவர்கள் மீண்டும் அவர்களது ஊருக்குச் செல்வதை மொங்கோலியப் பேரரசன் குப்ளாய் கான் விரும்பவில்லை. ஆயினும் 1292 ம் ஆண்டு அரைமனதுடன் இவர்களை தமது நாட்டிற்கே திரும்பிச் செல்ல அனுமதி வழங்கினான். பேரரசனின் ஆணைப்படி இவர்களுடன் ஒரு இளவரசியும் அனுப்பி வைக்கப்பட்டதுடன் அவளை ஈரான் நாட்டில் திருமணத்திற்காக ஒப்படைக்குமாறும் பணிக்கப்பட்டது.
இவர்களின் தாய் நாடு நோக்கிய பயணம் மிகவும் சிரமமானதாக அமைந்ததுடன் இவர்களுடன் பயணித்த பலரும் வழியிலேயே மாண்டு போயினர். இதைவிட மங்கோலியப் பேரரசின் எல்லையைத் தாண்டி ட்ரிபிசாண்ட் பேரரசின் எல்லையில் வழிப்பறிக் கொள்ளையரிடமும் வசமாக மாட்டிக் கொண்டனர். தாம் மங்கோலியப் பேரரசில் சேகரித்த செல்வத்தில் அனேகமானவற்றை இந்த வழிப்பறிக் கொள்ளையரிடம் பறிகொடுத்தனர். இவர்கள் தாம் பயணித்த பாதையில் இலங்கை, இந்தியா போன்ற தென் ஆசிய நாடுகளையும் தரிசித்தனர். இதன் படி இலங்கையின் இரத்தினக் கற்களைப் போற்றும் மார்க்கோ போலோ இலங்கையின் அரசனிடம் மிகவும் பெரிய உள்ளங்கை அளவான இரத்தினக் கல் இருந்ததாகக் கூறுகின்றார்.
அதன் பிறகு முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் நியமித்த இலங்கையின் இளவரசனான சாவகன் மைந்தன் என்பவனின் உதவியோடு பாண்டிநாட்டிற்கு வந்தார். இவர் பாண்டிநாட்டிற்கு வந்த போது முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருந்தது. இவர் இக்குலசேகரனே ஐந்து பாண்டியர்களில் மூத்தவன் எனவும், இவனது ஆட்சியில் பாண்டி நாடு உலகெங்கும் இல்லாத அளவுக்கு சிறப்பான நாடாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.
இதைவிட இந்தியாவின் கோரமண்டல் கரையில் உள்ள மக்கள் தமது வலக்கையாலே எந்த வொரு சுத்தமான செயலையும் செய்வதாகவும் இடக்கை அசுத்தமான காரியங்களைச் செய்யப்பயன்படுத்துவதாகவும் கூறுகின்றார். மேலும் தற்போதைய குஜராத் பகுதியில் உள்ள யோகிகள் பற்றியும் கூறுகின்றார். இவர்கள் சுமார் 150 -200 ஆண்டுகள் உயிர் வாழும் வல்லமை உடையவர்கள் என்றும் இவர்கள் மிகவும் சிறிதளவான உணவையே உண்பதாகவும் கூறியிருக்கின்றார்.
1298 இல் நடந்த போர் ஒன்றின் விளைவாக மார்க்கோ போலோ சிறை பிடிக்கப்பட்டார். இந்தப் போர் இவரின் நகரமான வெனிசிற்கும் வெனிசின் வர்த்தகத்தில் போட்டி நகரமான ஜினோவா விற்கும் இடையில் நடைபெற்றது. இவர் தான் சிறையில் வாழ்ந்த காலத்தில் தனது சிறை அறையைப் பகிர்ந்த ஒரு எழுத்தாளர் மூலம் தான் உலகைச் சுற்றிய கதையை எழுதினார்.
பலரும் இவரின் பயணக் கதைகளை நம்பவில்லை ஆனாலும் மத்தியகால ஐரோப்பாவின் மிகப் பிரபலமான புத்தகங்களில் ஒன்றாக மார்க்க போலோவின் புத்தகம் அமைந்தது. பலரும் இந்தப் புத்தகத்தால் கவரப்பட்டனர். அமெரிக்காவைக் கண்டுபிடித்ததாகப் புகழப்படும் கிரிஸ்தோபர் கொலம்பஸ் கூட இந்தப்புத்தகத்தின் ஒரு பிரதியை வைத்திருந்தார்.
இறுதியாக 1295 இல் தனது சொந்த பூமியான வெனிஸ் நகரத்தை மார்க்கோ போலோ அடைந்தார். இவர் வெனிசை வந்தடைந்த போது இவரது உறவினர் பலரும் பல ஆண்டுகளுக்கு முன்னரே இவர் இறந்துவிட்டதாக எண்ணியிருந்தனர்.
மொத்தம் 24 வருடங்கள் பல நாடுகளைத் தரிசித்த மார்க்கோ போலோ சுமார் 24,000 கிலோ மீட்டர் தூரத்தை கடந்திருந்தார் என்பதையும் குறிப்பட வேண்டும்.
1299 இல் சிறையில் இருந்து விடுதலை பெற்ற மார்க்கோ போலோ தனது நகரமான வெனிசிற்கு மீண்டு வந்தார். அவர் வெனிசில் பின் நாட்களின் பெரும் செல்வந்த வணிகராக இருந்தார். பல்வேறு நாடுகாண் பயனங்களை ஊக்குவித்தார் ஆயினும் அவர் அதன் பின்னர் எந்தவொரு பயண நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.
சிறையில் இருந்து நாடு திரும்பிய மார்க்கோ போலோ 1300 இல் பிரபல வணிகர் ஒருவரின் மகளான டொஆண்டா எனும் பெண்ணை மணம் செய்துகொண்டார். அத்துடன் அவரிற்கு மூன்று பெண் பிள்ளைகளும் கிடைக்கப்பெற்றது.
1323 இல் நோய்வாய்ப்பட்ட மார்க்கோ போலோ சனவரி 8, 1324 இல் ஒரேயடியாகப் படுக்கையில் வீழ்ந்தார். வைத்தியர்கள் இவரின் உயிரைக் காப்பாற்ற முயன்ற போதும் மரணப் படுக்கையில் இருந்து மார்க்க போலோவைக் காப்பாற்ற முடியவில்லை. இறுதி நாட்களில் தனது அடிமையாக இருந்த தட்டார் இனத்தைச் சேர்ந்த ஒருவரையும் மார்க்க போலோ விடுதலை செய்தார். தனது வணிகத்தை மகள் மற்றும் மனைவியிடம் ஒப்படைத்ததுடன் தேவாலயத்திற்கும் தனது செல்வத்தில் கணிசமான பங்கை வழங்கினார்.
மார்க்க போலோவின் இறுதி நாள் சரியாகக் கணிக்கப்படாவிட்டாலும் சூரியன் மறைந்த பின்னர் சனவரி 8 மற்றும் 9, 1324 இடையில் அவர் மறைந்ததாக கூறப்படுகின்றது.
கியோவானி டா பியன் டெல் கார்பைன் போன்ற பிற சிறிய அளவில் அறியப்பட்ட ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே சீனாவுக்குப் பயணம் செய்திருந்தனர். ஆனால் போலோவின் புத்தகமே பரவலாக அறியப்பட்ட முதல் பயணமாக இருந்தது. தூர கிழக்கு பற்றி போலோவின் விவரங்களை அறிந்த கிறிசுடோபர் கொலம்பசு அந்த நிலங்களை பார்வையிட விரும்பினார். கிழக்கில் கிறித்துவ பேரரசு என்ற போலோவின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட பெண்டோ டி கோய்சு மத்திய ஆசியா முழுவதும் மூன்று ஆண்டுகளில் 4,000 மைல்கள் (6,400 கி.மீ) பயணம் செய்தார். அவர் அப்பகுதியை ஒருபோதும் கண்டுபிடித்துவிடவில்லை என்றாலும் 1605 இல் சீனப்பெருஞ் சுவருடன் அவரது பயணம் முடிவுக்கு வந்தது. கத்தாய் என்று அறியப்பட்டிருந்த பகுதியைத்தான் மத்தேயோ ரீச்சி (1552-1610) சீனா என்று அழைத்தார் என்பது தெளிவு படுத்தப்பட்டது .
1721 இல் போலோ பாமீரைக் கடந்த பொழுது விவரித்த சிற்றினமான ஓவிசு அம்மான் மார்கோ போலோ செம்மறியாடு எனப்பெயரிடப்பட்டது.
1851 ஆம் ஆண்டில், செயிண்ட் சான், நியூ பிரன்சுவிக் நகரில் கட்டப்பட்ட ஒரு மூன்று முனைக் கப்பலுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. ; ஆறு மாதங்களுக்குள் உலகெங்கிலும் பயணம் செய்த முதல் கப்பல் இதுவாகும்
வெனிசு நாட்டில் உள்ள ஒரு விமான நிலையத்திற்கு வெனிசு மார்க்கோ போலோ விமான நிலையம் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது .
மார்கோ போலோவின் பயணமானது ஐரோப்பிய வரைபடத்தின் வளர்ச்சியில் சிறிதளவு தாக்கத்தையாவது ஏற்படுத்தியிருக்கலாம், ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் ஐரோப்பாவின் ஆராய்ச்சிகளுக்கு இவரது பயணம் வழிவகுத்திருப்பதாகக் கொள்ளலாம். 1453 இல் உருவாக்கப்பட்ட வரைபடத்தின் ஒரு பகுதி கத்தாயில் இருந்து மார்க்கோ போலோவால் வரையப்பட்ட ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.
மார்கோ போலோ தனது பயணத்தை விவரித்துக் காட்டிய ஒரு வரைபடத்தை ஒரு போதும் அவர் தயாரிக்கவில்லை என்றாலும், அவரது குடும்பம் தூர கிழக்குக்கு தொடர்பான பல வரைபடங்களை கொடுத்து உதவியது. இந்த வரைபடங்களின் தொகுப்பை போலோவின் மூன்று மகள்களான பேண்டினா, பெல்லிலா மற்றும் மோர்ட்டா ஆகியோர் கையெழுத்திட்டனர் இத்தொகுப்பில் போலோவின் பயண வழிகள் மட்டுமின்றி சப்பான், சைபீரியாவின் கம்சட்கா தீபகற்பம், பேரிங் நீரிணை மற்றும் அலாசுகாவின் கரையோரப் பகுதிகளுக்குகான கடல் வழிகளும் காணப்பட்டன.
{{citation}}
: CS1 maint: ref duplicates default (link){{citation}}
: CS1 maint: ref duplicates default (link)This article uses material from the Wikipedia தமிழ் article மார்க்கோ போலோ, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.