மாநகரம் என்பது ஒப்பீட்டளவில் பெரிய, நிரந்தரமான குடியிருப்பு ஆகும்.
இதை மாநகர், பெருநகரம், பெருநகர் போன்ற பெயர்களாலும் குறிப்பது உண்டு. பெரிய நகரமே பொதுவாக மாநகரம் (city) என அழைக்கப்பட்டாலும், மாநகரம் என்பதற்குப் பொதுவான வரைவிலக்கணம் கிடையாது. மாநகரத்தை, நகரத்திலிருந்து வேறுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் இணக்கப்பாடு இல்லை. இது நகரத்தின் வளர்ச்சியடைந்த ஒரு வகை எனலாம். மாநகரம் என்ற சொல் வெவ்வேறு நாடுகளில் வேறுபட்ட வரைவிலக்கணங்களுடன் பயன்பாட்டிலுள்ளது. பொதுவாக வரலாற்று, நிர்வாக மற்றும் பண்பாட்டுக் காரணங்கள் ஒரு நகரம் மாநகரமாக சட்டப்படி அறிவிக்கப் படுவதற்கான அடிப்படையாக அமைகின்றன.
எடுத்துக்காட்டாக, ஐக்கிய அமெரிக்க மாநிலமான மசச்சூசெட்சில் உள்ளூர் சட்டவாக்க சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டிணைப்பு விதிகள் மாநகரத்தை, நகரத்தில் இருந்து வேறுபடுத்துகின்றன. ஐக்கிய இராச்சியத்திலும், சில பொதுநலவாய நாடுகளிலும் மாநகரம் என்பது அரச பட்டயத்துடன் கூடிய ஒரு குடியிருப்பு ஆகும். முற்காலத்தில் ஐரோப்பாவில் பேராலயம் ஒன்றுடன் கூடிய நகர்ப்புறக் குடியிருப்பு மாநகரம் எனக் கருதப்பட்டது.
மநகரங்கள் பொதுவாகச் சுற்றுப்புறத்தூய்மை, பயன்படுசேவைகள், நிலப்பயன்பாடு, வீடமைப்பு, போக்குவரத்து போன்றவற்றுக்கான சிக்கலான முறைமைகளைக் கொண்டவை. மாநகரங்களில் காணும் செறிவான வளர்ச்சி மக்களிடையேயும், வணிக நிறுவனங்களுக்கு இடையேயுமான ஊடாட்டங்களை ஊக்குவித்து இரு பகுதியினருக்கும் நன்மை விளைவிக்கிறது. பெரிய மாநகரம் பொதுவாக புறநகர்கள், கூடுதல்நகர்ப் பகுதிகள் என்பவற்றைக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான மாநகரங்கள், தலைமைநகரங்களுடனும், நகர்ப்புறப் பகுதிகளுடனும் தொடர்பு கொண்டவையாக, வேலைக்காக நகர்ப்புற மையங்களை நோக்கிச் செல்லும் தொழில்சார்ந்த போக்குவரத்துச் செய்பவர்களை பெருமளவில் உருவாக்குகின்றன. மாநகரங்கள் இன்னொரு நகரத்தைத் தொடுமளவுக்கு வளர்ந்தால் அந்நகரங்களை உள்ளடக்கிய பகுதி நகரக்கூட்டம் (conurbation) எனப்படும்.
முதல் மாநகரங்கள் தோன்றியமைக்கான நிலைமைகளை அறிந்து கொள்வதற்குப் போதிய சான்றுகள் இல்லை. மாநகரங்கள் தோன்றியமைக்கான முன்நிபந்தனைகள், இவ்வுருவாக்கத்துக்கு உந்து விசையாக இருந்திருக்கக்கூடிய அடிப்படையான பொறிமுறைகள் என்பன குறித்துப் பல்வேறு கோட்பாட்டாளர்கள் தமக்குச் சரியெனத் தோன்றிய கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
புதியகற்காலப் புரட்சிக்குப் பின்பே முதல் மாநகரங்கள் தோன்றின என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. புதியகற்காலப் புரட்சியின்போது வேளாண்மை அறிமுகமானது. இது மக்கள் அடர்த்தியாக வாழ்வதைச் சாத்தியமாக்கியதன் மூலம் மாநகரங்கள் வளர்வதற்கு உதவியது. வேளாண்மையின் அறிமுகம், வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழ்ந்த மக்களைத் தமது நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டு வேளாண்மையைக் கைக்கொண்ட மக்களுக்கு அருகில் நிரந்தரமாக வாழ்வதற்கு ஊக்குவித்தது. வேளாண்மையினால் மக்கள்தொகை அடர்த்தி கூடியதும், ஓரலகு நிலத்தில் இருந்து பெறக்கூடிய உணவு உற்பத்தி அளவு கூடியதும் மாநகரங்களில் இடம்பெறுவன போன்ற நடவடிக்கைகளுக்கான வாய்ப்பான சூழ்நிலைகளை உருவாக்கின. "மாநகரங்களும் பொருளாதார வளர்ச்சியும்" என்னும் நூலை எழுதிய பால் பைரோச் என்பார் மேற் சொன்ன நிலைப்பாட்டை ஆதரிப்பவராக இருந்தார். இந்நூலில், உண்மையான மாநகரங்கள் உருவாவதற்கு முன் வேளாண்மை நடவடிக்கைகள் அவசியம் என அவர் வாதித்தார்.
ஒரு குடியிருப்பு மாநகரம் என்னும் தகுதியைப் பெறுவதற்கு, அது வணிகத்தை ஆதரிப்பதற்கான மிகையான மூலப்பொருட்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது வேரே கோர்டன் சில்டே என்பவரது கருத்து புதிய கற்காலத்துக்கு முன்னர், வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழ்ந்த சமுதாயங்களில், பெருமளவிலான மக்கள்தொகையைத் தாங்குவதற்குத் தேவையான உணவை வழங்குவதற்கு பெரிய நிலப்பரப்புத் தேவைப்பட்டது. இது வணிக ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதை இயலாதது ஆக்கியிருக்கும் என்கிறார் பைரோச். இதை விளக்குவதற்கு பைரோச் ஒரு எடுத்துக்காட்டைக் கொடுத்துள்ளார்: "மேற்கு ஐரோப்பாவில், முன்-புதியகற்காலத்தில் மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுரகிலோமீட்டருக்கு 0.1 ஆக இருந்திருக்கும்". இந்த மக்கள்தொகை அடர்த்தியைக் கணிப்புக்கான அடிப்படையாகக் கொண்டும், உணவு உற்பத்தியில் 10% வணிகத்துக்காக உபரியாக இருக்கும், மாநகரக் குடிமக்கள் வேளாண்மையில் ஈடுபடுவதில்லை என்னும் கருதுகோள்களின் அடிப்படையிலும், பின்வருமாறு கணிப்பிட்டார். "1000 பேரைக்கொண்ட ஒரு மாநகரைப் பேணுவதற்கு, போக்குவரத்துச் செலவைக் கருத்தில் கொள்ளாமல், 100,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புத் தேவைப்பட்டிருக்கும். போக்குவரத்துச் செலவையும் எடுத்துக்கொண்டால் தேவையான நிலப்பரப்பு 200,000 சதுர கிலோமீட்டர் ஆக இருக்கும்......". இது ஏறத்தாழ பெரிய பிரித்தானியாவின் பரப்பளவுக்கு ஈடானது என்று பைரோச் எடுத்துக் காட்டினார்.
யேன் யாக்கோப் என்னும் கோட்பாட்டாளர் நகர உருவாக்கம், வேளாண்மையின் அறிமுகத்துக்கு முந்தியது என்றும் அதனால் வேளாண்மை நகர உருவாக்கத்துக்கு உதவவில்லை என்றும் கூறுகிறார். தனது கோட்பாட்டை விளக்கும்போது மாநகரம் என்பதற்கான வரைவிலக்கணத்தை அவர் கொடுக்கவில்லை. ஆனால், அவரது விளக்கத்தின்படி, தொடக்ககால நகர்சார்ந்த நடவடிக்கை பற்றிய பொதுவான புரிதலுக்கும், யேன் எடுத்துக்காட்டும் வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழ்வோரின் சுற்றாடலில் இடம்பெறக்கூடிய நடவடிக்கைகளுக்கும் இடையே வேறுபாடு காணப்படுகிறது. தன்னுடைய கருத்தை விளக்குவதற்காக, யேன் ஒரு கற்பனையான நிலைமை ஒன்றை எடுத்துக்கொள்கிறார். இதன்படி பெறுமதி வாய்ந்த இயற்கை வளம் ஒன்று தொடக்ககாலப் பொருளாதார நடவடிக்கைகள் உருவாவதற்குக் காரணமாக அமைகின்றது. எரிமலைக் கண்ணாடியை இவ்வாறான இயற்கை வளத்துக்கு எடுத்துக்காட்டாக அவர் கொள்கிறார். எரிமலைக் கண்ணாடியைப் பயன்படுத்தி மிகவும் கூர்மையான ஆயுதங்களைச் செய்யமுடியும் என்பதால், இப்பொருள் கிடைக்கும் இடத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களிடம் இருந்து அதனைப் பண்டமாற்றுமூலம் பெற்றுக்கொள்வதற்குத் தொலை தூரங்களிலிருந்தும் பலர் வருவர். இது அவ்விடத்தில் பல வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கி வணிகத்தையும் விரிவடையச் செய்வதால் மேலும் பலர் அவ்விடத்தை நோக்கி வருவர். இவ்வாறு விற்பனையாகும் பண்டங்களுள் பல்வேறு வகையான விதைகளும் இருக்கும். இவ்விதைகள் பல வழிகளில், சில சமயம் எதிர்பாராத விதமாகவும், விதைக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் உற்பத்தியளவு கவனிக்கப்படும். காட்டுப் பயிராகத் தானே வளரும்போது கவனிப்பதை விட இது இலகுவாக இருக்கும். இது நல்ல விதைகளைத் தேர்வு செய்து விற்பனை செய்வதற்கும் வழி வகுக்கும்.
மக்கள் ஏன் தொடக்கத்தில் ஒன்றாக ஓரிடத்தில் சேர்ந்து அடர்த்தியாக வாழத் தலைப்பட்டனர் என்பதற்கு, கோட்பாட்டாளர்கள் பலவகையான காரணங்களை முன்வைத்துள்ளனர். பிரெண்டன் ஓ'பிளகேர்ட்டி என்பவர் தான் எழுதிய நகரப் பொருளியல் (City Economics) என்னும் நூலில், "அவற்றினது சாதகத் தன்மைகள், பாதகத் தன்மைகளைவிடக் கூடுதலாக இருந்தால் மட்டுமே, பல ஆயிரம் ஆண்டுகள் இருந்ததைப்போல, நகரங்கள் நிலைத்திருக்கும்" என்றார். ஓ'பிளகேர்ட்டி, கவரத்தக்க இரண்டு சாதக நிலைமைகளை எடுத்துக் காட்டுகிறார். ஒன்று, economies of scale மற்றது, உயரும் விகித அளவு விளைவு (increasing returns to scale). இக்கருத்துருக்கள் பொதுவாக நிறுவனங்களுடன் தொடர்புள்ளவை. எனினும், மிக அடிப்படையான பொருளாதார முறைமைகளில் கூட இவற்றின் பயன்பாட்டைக் காணலாம். எல்லா உள்ளீடுகளையும் இரண்டு மடங்காகக் கூட்டும்போது, விளைவு இரண்டு மடங்குக்கும் மேலாகக் கூடுமானால் அங்கே "உயரும் விகித அளவு விளைவு ஏற்படுவதாகக் கூறலாம். அதே வேளை விளைவு இரண்டு மடங்காகும்போது செலவு இரண்டு மடங்கிலும் குறைவாக இருக்குமானால் அந்நடவடிக்கை economies of scale ஐக் கொண்டிருக்கிறது எனக் கூறமுடியும். இந்தக் கருத்துருக்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருவதற்காக, ஓ'பிளகேர்ட்டி, நகரங்கள் உருவானதற்கான மிகப் பழைய காரணங்களுள் ஒன்றான "பாதுகாப்பு" என்பதைப் பயன்படுத்துகிறார். இந்த எடுத்துக்காட்டில், பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படுவும் எதுவும் (எகா. மதில் சுவர்) உள்ளீடு ஆகும். பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதியும், அங்கேயுள்ள பெறுமதியானவை அனைத்தும் ஒருங்கே "விளைவு" என்பதற்குள் அடங்கும். பாதுகாக்கப்பட வேண்டிய நிலப்பகுதி சதுரமானது என்றும், அதிலுள்ள ஒவ்வொரு எக்டெயர் நிலமும் ஒரேயளவு பாதுகாப்புப் பெறுமானம் கொண்டது என்றும் எடுத்துக்கொள்ளலாம். பாதுகாப்பின் சாதக விளைவு பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதியின் பரப்பளவுக்கு விகித சமனாக இருக்கும்.
எனவே, இதைப் பின்வருமாறு குறிக்கலாம்:
உள்ளீடு மதிற் சுவரின் நீளத்தில் தங்கியுள்ளது:
இவற்றின்படி இதில் "உயரும் விகித அளவு விளைவு" உள்ளது:
அத்துடன் economies of scale உம் இதில் காணப்படுகிறது. இதனால் நகரங்கள் பாதுகாப்பில் செலவுகளைக் குறைக்கின்றது. எனவே மக்கள் தம்மையும், தமது செல்வத்தையும் சூறையாடும் காட்டுமிராண்டிப் படைகளிடமிருந்து காத்துக் கொள்வதற்கான தேவை, நகரங்கள் உருவானதற்கான ஒரு காரணம் எனலாம்.
பொருட்கள், மக்கள், எண்ணக்கருக்கள் போன்றவற்றுக்கான போக்குவரத்துச் செலவு குறைவது நகர உருவாக்கத்துக்கான காரணம் என்பதை எட்வார்ட் கிளீசர் என்பாரும் தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். தூரம் குறைவதன் நன்மைகள் பற்றி விளக்கிய கிளீசர், மாநகரின் அளவு இரட்டிக்கும்போது, தொழிலாளர் 10% கூடுதலான கூலியைப் பெறுகின்றனர் என்கிறார். பெரிய மாநகரங்கள் ஒரே உற்பத்தித் திறனுக்கு சிறிய நகரங்களிலும் கூடுதலான கூலி கொடுப்பதில்லை எனக் கூறும் கிளீசர், தொழிலாளர்கள் பெரிய நகரங்களுக்கு இடம்பெயரும்போது அவர்களுடைய செயற்றிறன் அதிகமாவதாலேயே அவர்களது வருமானம் கூடுகிறது என விளக்குகிறார். எனினும், இரண்டு மடங்கு பெரிய நகரங்களுக்கு இடம்பெயரும்போது கிடைக்கும் 10% கூலி அதிகரிப்பு தொழிலாளர்களுக்கு அதிக பயனைக் கொடுப்பதில்லை. உயர்ந்த வாழ்க்கைச் செலவு கூடுதல் வருமானத்தை அவர்களிடன் இருந்து எடுத்துக்கொள்கிறது. ஆனாலும், நகரத்தில் வசிப்பதால் வேறு பயன்கள் அவர்களுக்குக் கிடைக்கின்றன.
நகரங்கள் எவ்வாறான வடிவங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்னும் கேள்விக்குப் பதிலாக நகரத் திட்டமிடலில் பல்வேறு வகையான திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. பொதுவாகப் பரவலாக அறியப்பட்ட வடிவங்களுள் ஒன்றாக "வலையமைப்புத் தளக்கோலம் கொண்ட நகரங்கள் விளங்குகின்றன. இத்தகைய நகருக்கான தளக் கோலம் சீனாவில் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பயன்பட்டு வருகின்றது. பேரரசர் அலெக்சாண்டரின் நகரத் திட்டமிடலாளரும், இவ்வாறான தளக்கோலத்தைத் தனியாக உருவாக்கினார். இவரது வடிவமைப்பை, உரோமர் விரும்பி ஏற்றுக்கொண்டனர். அயர்லாந்தின் திட்டமிடப்பட்டு 1613 இல் வேலைகள் துவக்கப்பட்ட முதல் நகரம் டெர்ரி ஆகும், இந்த நகர் கட்டுமானப் பணிகளில் சுவர்களை கட்டி முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆனது. நகரத்தைச் சூழ்ந்த இந்தச் சுவர்களில் நான்கு வாயில்களைக் கொண்டதாக மைய வைரம் போன்ற பாதுகாப்புமிக்க ஒரு நல்ல வடிவமைப்பு என்று கருதப்பட்டது. இவ்வடிவமைப்புகொண்ட கட்டடங்கள் பிரித்தானிய வட அமெரிக்காவின் காலனிகளில் பரவலாக பரவியது.
பண்டைய கிரேக்கர்கள் பெரும்பாலும் மத்தியதரைக் கடல் பகுதியில் தங்கள் குடியிருப்பு கட்டங்களை திட்டமிட்ட வகையில் அமைத்தனர். இதற்கு பிரையன் நகரமானது ஒரு சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக உள்ளது. இந்த நகரம் இன்றைய திட்டமிடப்பட்ட நகரங்களைவிட பல வகைகளில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருந்தது, பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முற்காலத்திய, சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள் மொகெஞ்சதாரோ போன்ற நகர கட்டுமானங்களைப் பயன்படுத்தி வழ்ந்துவந்தனர். மத்திய காலங்களில் சிறந்த திட்டமிடலோடு கட்டப்பட்ட நகரங்கள் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது. பிரான்சின் தெற்கே பல்வேறு ஆட்சியாளர்களால் நிறுவப்பட்ட நகரங்களும், பழைய டச்சு மற்றும் பிளெமெய்ஷு நகரங்களின் நகர விரிவாக்கங்களும் இவற்றிர்க்கு நல்ல உதாரணங்கள் ஆகும்.
19 ஆம் நூற்றாண்டில் திட்டமிடப்பட்ட நகரங்கள், குறிப்பாக பாரிஸ் நகரத்தின் மறுவடிவமைப்புக்குப் பிறகு இவ்வாறான திட்டங்கள் பிரபலமாக உருவாயின. இவற்றின் காரணமாக பழைய பாதைகள் மேலும் அகலப்படுத்தப்பட்டு மறு உருவாக்கம் செய்யப்பட்டன. ஐக்கிய அமெரிக்காவில் தனது புதிய நிலப்பகுதிகள் மற்றும் நகரங்களில் திட்டமிடப்பட்ட கட்ட அமைப்புகளை கட்டாயப்படுத்தியது, அமெரிக்காவின் மேற்குப்பகுதிகளான சால்ட் லேக் நகரம் மற்றும் சான் பிரான்சிஸ்கோ போன்ற இடங்களில் இவ்வாறு கட்டமைப்புகள் ஒழுங்கமைக்கப்பட்டன.
மற்ற வடிவங்களில் ஆரக்கால் கட்டமைப்பை உள்ளடக்கியிருக்கலாம், இதில் பிரதான சாலைகள் ஆரக்கால் போன்று மையப் புள்ளியில் இணைகின்றன. இது பெரும்பாலும் ஒரு வரலாற்று வடிவம் ஆகும், நகரம் வளரவளர நகர கட்டுமானம் நீண்ட காலமாக தொடர்ந்து வளர்ச்சியடைந்ததில் விளைவு ஆகும். அண்மைக்கால வரலாற்றில், இத்தகைய வடிவங்கள் நகரத்தின் புறநகர்பகுதிகளை சுற்றி உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தின. பல டச்சு நகரங்கள் இவ்வாறான முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளன: செறிவான சாலைகளால் சூழப்பட்ட ஒரு மையச் சதுரம். அதிலிருந்து நகரத்தின் ஒவ்வொரு விரிவாக்கமும் ஒரு புதிய வட்டமாக (நகர சுவர்கள் கொண்ட சாலை) குறிக்கப்படும். ஆம்ஸ்டர்டாம், ஹார்லெம் மற்றும் மாஸ்கோ போன்ற நகரங்களில், இந்த மாதிரியான இன்னும் தெளிவாக தெரியும் எடுத்துக்காட்டுகளாகும்.
This article uses material from the Wikipedia தமிழ் article மாநகரம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.