தெலங்காணா (Telengana, தெலுங்கு: తెలంగాణ) அல்லது தெலுங்கானா என்பது இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றாகும்.
இது ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு சூன் 2, 2014 முதல் தனி மாநிலமாக செயல்படத் தொடங்கியது. இதன் முதலமைச்சராக க. சந்திரசேகர ராவ் பதவியேற்றுக்கொண்டார். தெலுங்கானா என்பதன் மொழிபெயர்ப்பு தெலுங்கர்களின் நாடு என்பதாக அமையும். இங்குதான் தெலுங்கு மொழி பிறந்ததாகக் கருதப்படுகிறது. இது முன்னர் ஐதராபாத் நிசாம் ஆட்சியின் கீழிருந்த ஐதராபாத் ஆட்சிப்பகுதியைத் தெலுங்கு பேசும் பகுதிகளை உள்ளடக்கியது. தெலங்காணாவை ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரித்து தனிமாநிலமாக்க 2013-ஆம் ஆண்டு சூலை 30-ஆம் தேதி நடைபெற்ற ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
தெலங்காணா | |
---|---|
மாநிலம் | |
மேல் இடமிருந்து வலமாக: சார்மினார், வாரங்கல் கோட்டை, ஐதராபாத் நகரம், நிசாமாபாத் இரயில் நிலையம், குன்டாலா அருவி, பாலாக்ணுமா அரண்மனை | |
சின்னம் | |
பண்: "செய செய கே தெலுங்கானா" | |
இந்தியாவில் தெலங்காணாவின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் (தெலங்காணா): 17°49′28″N 79°11′16″E / 17.824400°N 79.187900°E | |
நாடு | இந்தியா |
உருவாக்கம் | 2 சூன் 2014 |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | ஐதராபாத்† |
மாவட்டம் | 33 |
அரசு | |
• நிர்வாகம் | தெலங்காணா அரசு |
• ஆளுநர் | தமிழிசை சவுந்தரராஜன் |
• முதலமைச்சர் | ரேவந்த் ரெட்டி (காங்கிரசு) |
• சட்டமன்றம் | ஈரவை முறைமை
|
• நாடாளுமன்ற தொகுதிகள் |
|
• உயர்நீதிமன்றம் | தெலங்காணா உயர் நீதிமன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,12,077 km2 (43,273 sq mi) |
பரப்பளவு தரவரிசை | 12-ஆவது |
ஏற்றம் | 468 m (1,535 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,51,93,978 |
• தரவரிசை | 12-ஆவது |
• அடர்த்தி | 307/km2 (800/sq mi) |
GDP (2018–19) | |
• மொத்தம் | ₹8.43 இலட்சம் கோடி (US$110 பில்லியன்) |
• தனிநபர் வருமானம் | ₹1,81,034 (US$2,300) |
நேர வலயம் | இ.சீ.நே. (ஒசநே+05:30) |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | IN-TG |
வாகனப் பதிவு | TS |
HDI (2018) | 0.664 medium · 17வது |
படிப்பறிவு (2011) | 66.46% |
அலுவல் மொழி | தெலுங்கு |
கூடுதல் அலுவல் மொழி | உருது |
இணையதளம் | www |
^† Temporary Joint Capital with Andhra Pradesh not more than 10 years ††Common for Telangana and Andhra Pradesh | |
சின்னங்கள் | |
சின்னம் | கால தோரணம், சார்மினார் |
மொழி | தெலுங்கு & உருது |
பாடல் | ஜெய ஜெய ஹே தெலங்கானா |
விலங்கு | புள்ளிமான் |
பறவை | பனங்காடை |
மலர் | ஆவாரை |
பழம் | மாம்பழம் |
மரம் | வன்னி (மரம்) |
ஆறு | கோதாவரி, கிருஷ்ணா, மஞ்சிரா மற்றும் மூசி |
விளையாட்டு | கபடி |
கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்கில் தக்காணத்தில் அமைந்துள்ள இந்த மண்டலத்தில் ஆந்திர மாவட்டங்கள் வாரங்கல், அதிலாபாத், கம்மம், மகபூப்நகர், நல்கொண்டா, ரங்காரெட்டி, கரீம்நகர், நிசாமாபாத், மேதக் ஆகியனவும் மாநிலத் தலைநகர் ஐதராபாத்தும் அடங்கும். கோதாவரி மற்றும் கிருட்டிணா ஆறுகள் இம்மண்டலத்தில் மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்கின்றன.
தெலுங்கானா மண்டலம் மகாபாரதத்தில் தெலிங்கா நாடு எனக் குறிப்பிடப்படுகிறது. இங்கு தெலவானா என்ற இனம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பாண்டவர்கள் பக்கம் சண்டை புரிந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.இதற்கு உறுதுணையாக வாரங்கலில் இருக்கும் பாண்டவுல குகாலு காட்டப்படுகிறது.
இங்கு சதவாகனர்கள் மற்றும் காகதியர்களின் பேரரசுகள் ஆண்டு வந்துள்ளனர். கரீம்நகர் மாவட்டத்திலுள்ள கோடிலிங்கலா முதல் தலைநகரமாக விளங்கியது. சதவாகனர்கள் பின்னர் தரணிக்கோட்டைக்கு தலைநகரை மாற்றினர். கோடிலிங்கலாவில் அகழாய்வுகளின்போது சதவாகனர் காலத்து நாணயங்கள் கிடைத்துள்ளன. பொ.ஊ. 14ஆம் நூற்றாண்டில் இப்பகுதி முதலில் தில்லி சுல்தான்கள் ஆட்சியிலும் பின்னர் பாமனி, குதுப் சாகி மற்றும் முகலாயப் பேரரசு ஆட்சிகளின் கீழ் இருந்தது. 18ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் மொகலாயப்பேரரசின் அழிவின்போது அசஃப்சாகி அரசவம்சம் தனியான ஐதராபாத் நாட்டை நிறுவியது. பின்னர் பிரித்தானிய அரசுடன் உடன்படிக்கை செய்துகொண்டு இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் கூடுதல் மக்கள்தொகை கொண்ட சமசுதானமாக விளங்கியது.தெலுங்கானா எப்போதும் பிரித்தானிய அரசின் நேரடி ஆட்சியில் இருந்ததில்லை.
1947ஆம் ஆண்டு இந்தியா பிரித்தானிய அரசிடமிருந்து விடுதலை பெற்றது. ஆனால் ஐதராபாத்தின் நிசாம் தமது தன்னாட்சியை தொடர விரும்பினார். புதிதாக அமைந்த இந்திய அரசு செப்டம்பர் 17, 1948 அன்று இந்திய இராணுவத்தின் போலோ நடவடிக்கை மூலம் ஐதராபாத் நாட்டை அகப்படுத்திக்கொண்டது. கம்யூனிஸ்ட்கள் தலைமையில் தெலுங்கானப் புரட்சி என அறியப்படும் விவசாயிகள் போராட்டம் 1946ஆம் ஆண்டு துவங்கி 1951 வரை தொடர்ந்தது.
இந்தியா விடுதலை பெற்றபோது தெலுங்கு பேசும் மக்கள் 22 மாவட்டங்களில் பரவியிருந்தனர். இவற்றில் 9 நிசாம் ஆட்சியின் கீழிருந்த ஐதராபாத் சமசுதானத்திலும், 12 மதராஸ் மாகாணத்திலும் ஒன்று பிரெஞ்சு காலனி ஏனாமிலும் இருந்தன. பொட்டி சிரீராமுலு என்ற தலைவரின் போராட்டத்தின் விளைவாக மதராசு மாகாணத்திலிருந்த 12 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு கர்நூலைத் தலைநகராகக் கொண்ட ஆந்திர மாநிலம் 1953ஆம் ஆண்டு உருவானது.
திசம்பர் 1953இல் இந்தியப் பிரதமர் சவகர்லால் நேரு மொழிவாரி மாநிலங்கள் ஆணயத்தை ஏற்படுத்தினார். உள்துறை அமைச்சர் கோவிந்த் வல்லப் பந்த் மேற்பார்வையில் நீதியரசர் ஃபசல் அலி தலைமையில் இயங்கிய இவ்வாணையம் தெலுங்கானா பகுதி மற்றும் புதிதாக உருவான ஆந்திரா பகுதி இரண்டிலும் பேசும் மொழி தெலுங்காக இருந்தபோதும் தெலுங்கானா மக்களின் விருப்பத்திற்கிணங்க இணைப்பதை தவிர்க்க வேண்டும் என தனது அறிக்கையில் 382ஆம் பத்தியில் குறிப்பிட்டிருந்தது. அவ்வறிக்கையின் 386ஆம் பத்தியில் தெலுங்கானா மக்களின் கவலைகளைக் கருத்தில்கொண்டு ஐதராபாத் மற்றும் ஆந்திராவை இரு மாநிலங்களாக வைத்துக்கொண்டு 1961 பொதுத்தேர்தலின் பின்னர் அமையும் ஐதராபாத் மாநில மக்களவையில் 2/3 பங்கினர் இணைய விரும்பினால் இவற்றை இணைக்கலாம் என தெரிவித்திருந்தது.
ஆனால் இந்தப் பரிந்துரையை ஏற்கமறுத்து இந்திய அரசு இரு பகுதிகளையும் இணைத்த ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தை நவம்பர் 1, 1956இல் நிறுவியது.இருப்பினும் தெலுங்கானா மக்களின் கவலைகளை நீக்க இரு பகுதி மக்களுக்கும் சமமான அதிகார பகிர்வு, நிதி பகிர்வுகளை உறுதி செய்யும் பெருந்தகையாளர் உடன்பாடு (Gentlemen's agreement of Andhra Pradesh) (1956) ஒன்றை அளித்தது.
1956ஆம் ஆண்டின் பெருந்தகையாளர் உடன்பாட்டின்படி தெலுங்கானாவிற்கு உரிய பகிர்வுகள் மற்றும் உறுதிகள் செயல்படுத்துவதில் குறைபட்டிருந்த மக்கள் 1969ஆம் ஆண்டு இறுதியில் இந்த உடன்பாடு முடிவுக்கு வரவிருப்பதை எதிர்த்து இந்த உடன்பாட்டை நீடிக்க வேண்டும் என குரல் எழுப்பினர். சனவரி 1969இல் ஓஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அது மெதுவே பரவி தெலுங்கானா மக்கள் இயக்கமாக உருப்பெற்றது. அரசு ஊழியர்கள் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களும் போராட்டத்திற்கு துணை நின்றனர். இந்த இயக்கம் வன்முறையில் முடிந்து 360 மாணவர்களுக்கும் மேலானவர்கள் உயிரிழந்தனர்.
ஆட்சிபுரிந்த காங்கிரசு கட்சியிலிருந்து வேறுபாடு கொண்டு வெளியேறிய காங்கிரசு தலைவர்கள் எம்.சென்னாரெட்டி தலைமையில் தெலுங்கானா பிரசா சமிதி என்ற கட்சியை ஆரம்பித்தனர். அடுத்து வந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற போதும் செப்டம்பர் 1971இல் தமது கொள்கைகளைக் கைவிட்டு இவர்கள் காங்கிரசில் மீண்டும் இணைந்தது இந்த இயக்கத்திற்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியது.
இருபது ஆண்டுகள் நீறுபூத்த நெருப்பாக இருந்த இயக்கத்திற்கு 1990களில் பாரதிய சனதா கட்சி தான் வெற்றி பெற்றால் தனித் தெலுங்கானா பெற்றுத் தருவதாக வாக்குறுதி கொடுத்து புத்துயிர் ஊட்டியது.ஆனால் தங்கள் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் எதிர்ப்பினால் அதனை நிறைவேற்றமுடியவில்லை. காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தனி தெலுங்கானா மாநிலத்தை ஆதரித்து தெலுங்கானா காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் அமைப்பை நிறுவினர். அதே நேரம் தனி மாநிலம் காணுவதையே ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்ட தெலுங்கானா இராட்டிர சமிதி என்ற புதிய கட்சியை கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ் துவக்கினார்.
2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரசும் தெ.ரா.ச. கட்சியும் கூட்டணி அமைத்து தனி தெலுங்கானா காணும் வகைகளை ஆராய்வதாக உறுதி கூறி ஆட்சியைக் கைப்பற்றின. மைய அரசின் பொது குறைந்த திட்டத்திலும் தெலுங்கானா மாநிலம் அமைப்பது இடம் பெற்றிருந்தது.அவ்வுறுதியின் அடிப்படையில் தெராசவும் கூட்டணி அரசில் பங்கேற்றது. இரண்டாண்டுகள் எதுவும் நிகழாத நிலையில் செப்டம்பர் 2006இல் தெராச கூட்டணியிலிருந்து விலகியது. காங்கிரசு அரசிற்கு தெலுங்கானா மாநிலம் அமைக்க அழுத்தம் கூடியது. மார்ச் 2008இல் அனைத்து தெராச சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக பதவி விலகி இடைத்தேர்தல்களுக்கு வழிவகுத்தனர். ஆனால் இந்த இடைத்தேர்தல்களில் தெராச தனது 16 சட்டமன்ற தொகுதிகளில் ஏழையும் 4 நாடாளுமன்ற தொகுதிகளில் இரண்டையும் மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடிந்தது.
இதனிடையே தெலுங்குதேச கட்சியின் தேவேந்தர் கௌட் என்ற கட்சியின் சட்டமன்ற துணைத்தலைவர் கட்சியிலிருந்து பிரிந்து நவ தெலுங்கானா பிரசா கட்சியை துவக்கினார். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2008இல் தனது 26 ஆண்டு அரசியல் வாழ்வின் வரலாற்றில் ஓர் திருப்புமுனையாக தெலுங்குதேசம் கட்சியும் தெலுங்கானா மாநிலம் அமைவதை ஆதரித்தது.
நவ தெலுங்கானா பிரசா கட்சி நவம்பர் 2, 2008இல் தெலுங்கானாவை தனி மாநிலமாக அறிவித்து அடங்கியுள்ள 10 மாவட்டங்களைக் குறிக்கும் விதமாக பத்து வெண்புறாக்களை பறக்க விட்டார்.
2009 பொதுத் தேர்தல்களின் போது தெராச மற்ற எதிர்கட்சிகளுடன் மகாகூட்டணி அமைத்து காங்கிரசை தோற்கடிக்க உறுதி பூண்டனர்.
புதிதாக திரைப்பட நடிகர் சிரஞ்சீவி துவங்கிய பிரசா இராச்சியம் கட்சியும் தெலுங்கானா அமைய வாக்குறுதி கொடுத்தனர். நவ தெலுங்கானா கட்சி சிரஞ்சீவியுடன் இணைந்தனர்.
இருப்பினும் தேர்தல் முடிவுகள் காங்கிரசிற்கு ஆதரவாகவே இருந்தன; மாநிலத்தில் ஆட்சியையும் தக்க வைத்துக்கொண்டது. முதலமைச்சர் இராசசேகர ரெட்டி தனித் தெலுங்கானா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
திசம்பர் 2009: தெராச தலைவர் கே. சந்திரசேகர் ராவ் தமது கோரிக்கைக்காக சாகும்வரை உண்ணாநோன்பு துவக்கினார். அவரது கைது மற்றும் உடல்நிலை மோசமடைவதை அடுத்து கடையடைப்புகளும் வன்முறையும் மீண்டும் எழுந்துள்ளது.
திசம்பர் 2009, 10-ஆம் நாளன்று, இந்திய மைய அரசு, தெலுங்கானா மாநிலம் அமைவதற்கான ஏற்பாடுகளை செய்யும் என்று அறிவித்தது. இதற்கான அறிவிப்பை மைய உள் துறை அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் அதே நாளில் வெளியிட்டார்.
இந்தியாவின் 29வது மாநிலமான தெலங்கானா, 4 சூன் 2014-இல் புதிதாக நிறுவப்படும் போது ஆதிலாபாத், ஐதராபாத், கரீம் நகர், கம்மம், மகபூப்நகர், மேடக், நல்கொண்டா, நிசாமாபாத், ரங்காரெட்டி, வாரங்கல் என பத்து மாவட்டங்களை மட்டும் கொண்டிருந்தது.
மக்களின் சமூக, கல்வி, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் பழைய பத்து மாவட்டங்களின் பகுதிகளை பிரித்து 21 புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டியிருந்தது. எனவே 11 அக்டோபர் 2016 அன்று, ஏற்கனவே உள்ள பத்து மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டு 21 புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டது. பிப்ரவரி, 2019-இல் நாராயணன்பேட்டை மாவட்டம் மற்றும் முலுகு மாவட்டம் புதிதாக நிறுவபப்ட்டது. மாவட்டங்களைப் பிரித்து மறுசீரமைக்கப்பட்டப் பின்னர் தெலங்கானா மாநிலம் தற்போது 33 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. அவைகள்:
தெலங்கான மாநிலத்தின் முக்கிய நகரங்கள்; ஐதராபாத், வாரங்கல், நிசாமாபாத், கரீம்நகர், கம்மம், ராமகுண்டம், மகபூப்நகர், நல்கொண்டா, ஆதிலாபாத், பத்ராச்சலம், கொத்தகூடம் மற்றும் சூர்யபேட்டை ஆகும்.
தெலங்கானா மாநிலத்தில் ஆறு மாநகராட்சிகளும், முப்பத்து எட்டு நகராட்சிகளும், இருபத்து ஐந்து நகரப் பஞ்சாயத்து மன்றங்களும், 443 உறுப்பினர்களுடன் கூடிய ஒன்பது மாவட்ட ஊராட்சி முகமைகளும், 6497 உறுப்பினர்களுடன் கூடிய 443 மண்டல மக்கள் மன்றங்களும், 8778 ஊராட்சி மன்றங்களும் உள்ளது.
114,840 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தெலங்கானா மாநிலம், 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 351.94 இலட்சம் மக்கள் தொகையுடன் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 177.04 இலட்சம் ஆகவும், பெண்கள் 174.90 இலட்சம் ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டு (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி 13.58% ஆக உயர்ந்துள்ளது. ஊர்நாட்டு மக்கள் தொகை 215.85 இலட்சங்கள் ஆகவும்; நகர்ப்புற மக்கள் தொகை 136.09 இலட்சங்கள் ஆக உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 988 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 307 பேர் வீதம் உள்ளனர். தலித்துகள்(தாழ்த்தப்பட்டோர்) தொகை 54.33 இலட்சமாகவும்; பழங்குடி மக்கள் மக்கள் தொகை 32.87 இலட்சமாக உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 20.28 இலட்சமாக உள்ளது. மாநில சராசரி படிப்பறிவு 66.46% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 74.95% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 57.92% ஆகவும் உள்ளது. மாநிலத்தில் பணி புரிபவர்கள் 164.53 இலட்சமாகும்.
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 85% ஆகவும், இசுலாமியர் மக்கள் தொகை 12.7% ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1.3% ஆக உள்ளது. பிற சமயத்தவர்களின் மக்கள் தொகை 0.9% ஆக உள்ளது.
தெலுங்கு மொழி ஆட்சி மொழியாக உள்ளது. 77 விழுக்காடு மக்கள் தெலுங்கு மொழியும், 12 விழுக்காடு மக்கள் உருது மொழியும் மற்றும் 13 விழுக்காட்டினர் வேறு மொழிகளையும் பேசிகின்றனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தை பிரித்து தெலுங்காணா தனிமாநிலம் அமைப்பதற்கு சீமாந்தரா எனப்படும் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா எனப்படும் உள்நிலப் பகுதிகளில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. எனினும், தெலுங்காணா இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக 2014 சூன் 2 முதல் செயல்படத்தொடங்கியது.
This article uses material from the Wikipedia தமிழ் article தெலங்காணா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.