சாவ் நடனம் .
இது ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா பிராந்தியங்களில் பண்டிகைகளின் போது அல்லது விழாக்காலங்களில் நிகழ்த்தப்படுகிறது பாரம்பரியமும் தற்காப்புக் கலையும், பழங்குடி மக்களின் நாட்டுப்புறவியல் அம்சங்களும் கலந்த ஓர் இந்திய செவ்வியல் நடனமாகும். சாவ் நடனத்தின் தோற்றுய் கிழக்கு இந்தியா ஆகும். இதில் மூன்று பாணிகள் உள்ளன. வங்காளத்தின் புருலியா சாவ், ஜார்க்கண்டின் செரய்கெல்லா சாவ், மற்றும் ஒடிசாவின் மயூர்பஞ்ச் சாவ் என இவை நிகழ்த்தப்படும் இடத்திற்கு ஏற்ப பெயரிட்டு வழங்கப்படுகின்றன.
ஒரு நாட்டுப்புற நடனத்தின் அம்சங்களுடன் தற்காப்புக் கலைகள், கழைக்கூத்து, தடகள அம்சங்களும் கலந்த கருப்பொருள்களில் விழக்காலங்களில் நிகழ்த்தப்படும் சாவ் நடனம், சைவம், சாக்தம் மற்றும் வைணவம் ஆகியவற்றில் காணப்படும் மதக் கருப்பொருள்களுடன் கட்டமைக்கப்பட்ட நடனமாகவும் உள்ளது. நடன உடைகள் பாணிகளுக்கு ஏற்ப வேறுபடுகின்றன. புருலியா மற்றும் சராய்கேலா ஆகியவிடங்களில் கதாபாத்திரத்தை அடையாளம் காண முகமூடிகளைப் பயன்படுத்துகின்றனர். சாவ் நடனக் கலைஞர்களால் இயற்றப்பட்ட கதைகளில் இந்து காவியங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதம், புராணங்கள் மற்றும் பிற இந்திய இலக்கியங்கள் ஆகியவை அடங்கும்.
இந்த நடனம் பாரம்பரியமாக ஆண்கள் மட்டுமே கொண்ட குழுவால் ஆடப்படும். மேலும் இது ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலத்தில் பிராந்திய ரீதியாக கொண்டாடப்படுகிறது. இந்து சமய செவ்வியல் நடனங்களின் இணைவு மற்றும் பண்டைய பிராந்தியப் பழங்குடியினரின் மரபுகளிலிருந்து தோன்றிய ஒரு ஒத்திசைவான நடன வடிவமாக சாவ் நடனம் இருக்கலாம். நடனம் காண்பதற்கு சிறப்பாகவும் பண்டிகை மற்றும் மத உணர்வில் பல்வேறு சமூக-பொருளாதார பின்னணிகளைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைப்பதாகவும் இருக்கிறது.
சாவ் என்பது மேற்கே சோட்டா நாக்பூர் மேட்டுநிலம் முதல் கிழக்கே [[கங்கை டெல்டாப்பகுதி வரை பரவியிருந்த ரார் பிராந்தியத்தின் நாட்டுப்புற நடனம் ஆகும். சாவ் என்ற சொல் சமஸ்கிருத மொழியில் வழங்கப்படும் சாயாவிலிருந்து (நிழல், உருவம் அல்லது முகமூடி) பெறப்பட்டிருக்கலாம். சமஸ்கிருத வேரச் சொல்லான சாத்மா (மாறுவேடம்) என்ற சொல்லிலிருந்து வந்திருக்கலாம் எனச் சிலர் கருதுகின்றனர். சித்காந்த் மகாபத்ரா போன்றவர்கள் படைப்பயிற்சி, கவச உடை ஆகியவற்றைக் குறிக்க ஒடிய மொழியில் வழங்கப்படும் சாவுனி என்ற சொல்லிலிருந்து பெயர் வந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர்.
சாவ் நடனம் முக்கியமாக ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா பிராந்தியங்களில் பண்டிகைகளின் போது நிகழ்த்தப்படுகிறது, குறிப்பாக அனைத்து சமூகத்தினரும் பங்குகொள்ளும் சைத்ரா பர்வாவின் வசந்தவிழாவில் இந்த நடனம் நிகழ்த்தப்படுகிறது. புருலியா சாவ் நடனம் சூரிய விழாவின் போது கொண்டாடப்படுகிறது.
புருலியா மற்றும் செராய்கெல்லா பாணிகளில் சாவ் நடனத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக முகமூடிகள் திகழ்கின்றன. நடனம், இசை மற்றும் முகமூடி தயாரித்தல் ஆகியவற்றைப் பற்றிய அறிவு வாய்வழியாகவே பரவியது. வடக்கு ஒடிசாவில் நிகழ்த்தப்படும் சாவ் நடனத்தின் போது முகமூடியைப் பயன்படுத்துவதில்லை, ஆனால் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக கலைஞர்கள் முதலில் மேடையில் தோன்றும்போது முகமூடிகள் பயன்படுத்தப்படுகின்றன.
சாவ் நடனத்தின் இரண்டு பாணிகளிலும் அதாவது நடனத்திற்கும், போர்நுட்பங்களுடன் ஒன்றிணைந்த தற்காப்புக்கலைகளை வடிவங்களுக்கும் (இவை கெல் என அழைக்கப்படுகின்றன) முகமூடிகளைப் பயன்படுத்துகின்றனர். பறவைகள் மற்றும் விலங்குகளின் பகட்டான நடைகள் ( சாலிஸ் மற்றும் டாப்காஸ் என அழைக்கப்படுகின்றன) மற்றும் கிராம இல்லத்தரசிகளின் வேலைகளை அடிப்படையாகக் கொண்ட பாவனைகள் ஆகியவற்றை இக்கலைஞர்கள் வெளிப்படுத்துகின்றனர். மோகன் கோக்கர் என்பவரின் கூற்றுப்படி, சாவ் நடனத்தின் இந்த வடிவமைப்பு, சடங்கு அல்லது வழிபாட்டின் அடிப்படையில் ஏற்பட்டதல்ல. மாறாக இது ஒரு சமூகக் கொண்டாட்டம் மற்றும் பொழுதுபோக்கின் ஒரு வடிவம் ஆகும்.
சாவ் நடனத்தை ஆண் நடனக் கலைஞர்கள், இரவு நேரத்தில் அகதா அல்லது அசார் என்று அழைக்கப்படும் ஒரு திறந்தவெளியில் நிகழ்த்துகின்றனர். தற்காலத்தில் இதில் பெண்களும் பங்குகொள்கின்றனர். மொகுரி எனப்படும் நாணல் குழாயும் செனாய் இசைக்கருவியும் கொண்டு பாரம்பரிய நாட்டுப்புற இசையுடன் லயமும் இணைந்த பாடல்கள் பாடப்படுகின்றன. இதில் வகைக்கேற்ப டோல், தம்சா, கர்க்கா, சாட் சாடி எனப் பல்வேறு முரசுக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நடனங்களுக்கான கருப்பொருள்கள் உள்ளூர் புராணக்கதைகள், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் அத்தியாயங்கள் மற்றும் பிற நுண்ணிய கருப்பொருள்கள் ஆகியவை அடங்கும்.
சராய்கேலா சாவு சராய்கேலா என்ற இடத்தில் வளர்ச்சியடையடைந்த நடனமாகும்.இதன் தற்போதைய நிர்வாக தலைமையகம் ஜார்க்கண்டின் சராய்கேலா கர்சாவான் மாவட்டத்தில் உள்ளது . மேற்கு வங்காளத்தின் புருலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்படுவது புரூலியா சாவு எனவும், ஒடிசாவின் மயுர்பஞ்ச் மாவட்டத்தில் நிகழ்த்தப்படுவது மயுர்பஞ்ச் சாவு என்றும் அழைக்கப்படுகிறது. மூன்று துணை வகைகளில் மிக முக்கியமான வேறுபாடு முகமூடிகளின் பயன்பாடு பற்றியது. புருலியா மற்றும் செராய்கெல்லா பாணிகளில் சாவ் நடனத்தின் போது முகமூடிகளைப் பயன்படுத்துகின்றனர். மயூர்பஞ்ச் சாவ் நடனத்தில் மூகமூடி எதுவும் பயன்படுத்தப் படுவதில்லை.
2010 ஆம் ஆண்டில் சாவ் நடனம் யுனெஸ்கோவின் மனிதநேயத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதி பட்டியலில் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்தித் திரைப்படமான பார்பி திரைப்படத்தில் புருலியா சாவ் இடம்பெறும் பல காட்சிகள் உள்ளன.
மிகவும் சுவையான உண்மை என்னவென்றால், புருலியா சாவ் நடனம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நடனங்களின் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளது. புருலியா சாவ் நடனத்தில் முகமூடியை பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒடிசா சாவிற்கு முகமூடி இல்லை, இதன் மூலம் உடல் இயக்கம் மற்றும் சைகையுடன் முகபாவனை சேர்த்து நிகழ்த்தப்படுகிறது. பாரம்பரியமாக, ஒரு அறுவடை முடிவடைந்து ஒரு புதிய நடவு தொடங்கும் போது சாவ் நடனம் நடைபெறும்.
புருலியாவின் சாவ் முகமூடி புவிசார் குறியீடுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. புருலியா சாவின் அடிப்படை வேறுபாடு இந்த முகமூடி தனித்துவமானது மற்றும் பாரம்பரியமானது.
This article uses material from the Wikipedia தமிழ் article சாவ் நடனம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.